மும்பை: சஞ்சய் பங்கரின் மகனாக இருந்த ஆரியன் பங்கர் தற்போது பெண்ணாக மாறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு, மாற்றுப் பாலினத்தவராக மாறி இருக்கிறார். தனது பெயரை அனயா பங்கர் என அவர் மாற்றிக் கொண்டுள்ள நிலையில், தற்போது தான் மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாக மருத்துவச் சான்றிதழைக் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சஞ்சய் பங்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும் ஆவார். அவரது மகனாக இருந்த ஆரியன் பங்கர் மும்பை அணியில் ஜூனியர் பிரிவில் விளையாடியவர். சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரோடு அவர் விளையாடியிருக்கிறார்; அவர்களோடு அவர் நட்பிலும் இருக்கிறார். தற்போது தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐசிசி) கடந்த ஆண்டு மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஒரு விதியை அறிவித்திருந்தது. இந்த நிலையில், அனயா பங்கர் தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதற்கான அறிக்கை இது எனவும், கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்தச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆய்வு அறிக்கை தனது கருத்துக்களையோ, அனுமானங்களையோ சொல்லவில்லை; ஆனால், உண்மையான தகவல்களைச் சொல்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், இந்த அறிக்கையை பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு சமர்ப்பித்திருப்பதாகவும், இதன் மூலம் இந்த தரவுகளை வைத்து ஒரு விவாதத்தைத் துவங்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும், பயத்தை உருவாக்கப் போவதில்லை எனவும் அனயா பங்கர் கூறியிருக்கிறார்.
மாற்றுப் பாலினத்தவருக்கான இடத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், ஏற்கனவே இருப்பதைப் பிரிப்பதற்கு முயற்சி செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். "அறிவியல் நான் மகளிர் கிரிக்கெட் ஆடுவதற்குத் தகுதியானவள் என்று சொல்கிறது. இந்த உண்மையை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி" என அந்த வீடியோவில் அனயா பங்கர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.