இன்னாள் வர்ணனையாளர்
முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும், தற்போதைய வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் விமர்சகருமான சஞ்சய் மஞ்ச்ரேகர், கிரிக்கெட் போட்டிகளின்போது தன்னுடைய வர்ணனைகளின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது வர்ணனைகள் சமயத்தில் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மஞ்ச்ரேகர்
இந்நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது வர்ணனையில் ஈடுபட்ட மஞ்ச்ரேகர், சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
நீண்ட நாட்களாக வர்ணனையாளராக இருக்கும் ஹர்ஷா போக்ளேவை விட களத்தில் விளையாடிய தன்னை போன்றவர்களுக்கு தான் கள நிலவரம் தெரியும் என்ற தொனியில் மஞ்ச்ரேகர் பேசியது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இதையடுத்து மஞ்ச்ரேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அநாகரீகமாக நடந்ததற்கு வருத்தம்
இந்நிலையில் நேரலையில் தான் அவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் முறையற்ற வகையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வர்ணனையாளர் மற்றும் கிரிக்கெட் விமர்சகராக 2019 தனக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
"நேரலையில் பேசியது தவறு"
நேரலையில் தான் அவ்வாறு பேசியது தவறு என்பதை உணர்ந்தவுடன் உடனடியாக நிகழ்ச்சியின் புரொடியூசரிடம் தான் மன்னிப்பு கேட்டதாகவும் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.