மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீது ஒரு காலத்தில் அவர் கேப்டன் பதவிக்கு மிகவும் ஆசைப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் விராட் கோலி அப்படிப்பட்ட நபர் கிடையாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பு விராட் கோலிக்கு தற்போது ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அணிக்கு விராட் கோலி திரும்புகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், சச்சினுக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமையை என்னால் பார்க்க முடிகிறது. இருவரும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அணுகி விளையாடுகிறார்கள்.எப்போதுமே கிரிக்கெட் களத்தில் இருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகிறார்கள். விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அவர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடவே இல்லை. இருந்தும் அவர் மைதானத்தில் நின்றார். என்னை கேட்டால் விராட் கோலிக்கு கேப்டன் பதவி மீதோ அதிகாரம் மீதோ ஆசையே கிடையாது. அவருக்கு வேண்டியது எல்லாம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும். அணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்பதில் தான் இருக்கிறது.
மேலும் விராட் கோலி தனது வாழ்க்கையில் இந்த பகுதியை மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் அவர் இருந்து விட்டார். இதனால் தற்போது அணியில் சாதாரண வீரராக இந்த தருணத்தை அவர் கொண்டாடி வருகிறார். இந்திய அணியில் வெற்றியில் பங்களிக்க வேண்டும் என்பதில் தான் விராட் கோலிக்கு முக்கியமாக இருக்கிறதே தவிர அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சுத்தமாக இல்லை.
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதம் அடித்திருந்தார். கவாஸ்கர் அடித்ததை விட 17 சதங்கள் கூடுதலாக சச்சின் அடித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை ரன் அடிப்பது என்பது மிகவும் சுலபம். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் எப்போதும் விக்கெட்டை எடுக்க குறியாக இருக்க மாட்டார்கள். சதம் குவிக்க வேண்டும் என்ற வகையில் சச்சினும் கோலியும் மிகவும் ஸ்பெஷலான வீரர்கள். விராட் கோலியால் சச்சினின் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் என்ற ரெக்கார்டை உடைக்க முடியும். ஆனால் டெஸ்டில் சச்சினின் சதத்தை அவரால் தொட முடியாது என்று நான் நினைக்கிறேன் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.