"வைபவ் சூர்யவன்ஷி செய்த செயலுக்கு அணியிலிருந்து நீக்கி பாடம் எடுத்திருக்கணும்".. மஞ்ச்ரேக்கர் பேச்சு
தம்புள்ளா: மைதானத்தில் இலங்கை வீரரை ஆக்ரோஷமாகத் தாக்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கி தகுந்த பாடம் புகட்டியிருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான பரபரப்பான போட்டிக்கு பின், இந்திய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரர் விசென் ஹாலம்பகேவை நெஞ்சில் தள்ளி மோதலில் ஈடுபட்டது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "நான் இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் இருந்து வைபவ் சூர்யவன்ஷியை கண்டிப்பாக நீக்கியிருப்பேன். மைதானத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும், எவ்வளவு தூண்டப்பட்டாலும் உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை அவனுக்கு இதன் மூலம் புரிய வைத்திருக்க வேண்டும்" என்று கறாராகக் கூறியுள்ளார்.

இலங்கை வீரர் ஹாலம்பகே தொடர் முழுவதும் வைபவ்வை நோக்கி, "வீட்டுக்குப் போ, இது ஐபிஎல் கிடையாது" என்று கூறி சீண்டியதால்தான் வைபவ் இந்த ஆக்ரோஷமான முடிவை எடுத்தார் என்ற பின்னணி தகவல் வெளியான போதிலும், மஞ்ச்ரேக்கர் இந்த ஒழுங்கீன செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சமீபத்தில் ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற வைபவ், சச்சின் டெண்டுல்கரின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்து மிகக் குறைந்த வயதில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால், தற்போதைய முத்தரப்பு தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது கவனம் பெற்றுள்ளது.
இத்தொடரில் அவரது ஸ்கோர்கள் முறையே 14, 44, 21 மற்றும் 38 ரன்களாக உள்ளன. ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் 2 முறை கேட்ச் வாய்ப்புகளில் தப்பிப் பிழைத்த அவர், இறுதியாக 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை தேவையில்லாமல் பறிகொடுத்து ஏமாற்றமளித்தார்.


Click it and Unblock the Notifications

