லக்னோ: ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து கோபமடைந்த சஞ்சீவ் கோயங்கா, மைதானத்தில் பார்வையாளர் பகுதியிலிருந்து வேகமாக உள்ளே சென்றார். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சிலர் ரிஷப் பண்டை விமர்சித்து வரும் நிலையில், சிலர் சஞ்சீவ் கோயங்காவின் செயல் சரியல்ல என அவரையும் விமர்சித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் மிக மோசமாகச் செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு இதுவரை அவர் ஆடிய 12 போட்டிகளில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவரது சராசரி 12.27 மட்டுமே. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே அவரது மோசமான பேட்டிங் ஆகும். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100 ஆக உள்ளது. மொத்தத்தில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மிக மோசமான செயல்பாட்டைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார். கேப்டனாகவும் ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் 160+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து வந்தனர். மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். ரிஷப் பண்டைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி இருந்தனர்.
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததை அடுத்து, பார்வையாளர்கள் பகுதியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவ் கோயங்கா உடனடியாக ஏமாற்றமடைந்து அந்த இடத்தை விட்டு உள்ளே சென்றார். அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன.
பலரும் "27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பண்டை வாங்கியவருக்கு இப்படித்தான் ஏமாற்றமாக இருக்கும்" எனக் கூறி உள்ளனர். வேறு சிலரோ "ஷாருக் கான் போன்ற மற்ற அணிகளின் உரிமையாளர்கள் இத்தனை ஏமாற்றத்தையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்துவதில்லை. அந்த வகையில் சஞ்சீவ் கோயங்கா செய்தது சரி அல்ல" எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து இருக்கிறது.