சென்னை: சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப் போவதாக ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு சஞ்சு சாம்சனின் மேலாளர் 'லைக்' செய்திருக்கிறார். இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய சஞ்சு சாம்சன், தற்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அணிமாற உள்ளதாக ஐபிஎல் தொடரின் முடிவிலிருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், அதில் 8 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத்தான் விளையாடி இருக்கிறார். அந்த அணியின் கேப்டனாகவும் 2021 ஐபிஎல் முதல் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், 2025 ஐபிஎல் தொடர் சஞ்சு சாம்சனுக்கு நல்லபடியாக அமையவில்லை. இந்தத் தொடருக்கு முன்பு இருந்தே விரலில் ஏற்பட்ட காயத்தால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தார். அதனால் முதல் மூன்று போட்டிகளின் போது அவர் 'இம்பேக்ட் வீரராக' விளையாடினார். அவருக்கு பதிலாக ரியான் பராக் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.
மீண்டும் தொடரின் இடையே சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அவர் போட்டியில் விளையாடுவதில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மீண்டும் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். இதனிடையே, சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் சஞ்சு சாம்சன் நல்ல உறவில் இல்லை எனவும் சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த நிலையில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலக இருப்பதாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை என்பதால் அவர் அந்த அணிக்கு செல்வார் எனவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அவர் இல்லை என்றால், அவருக்கு இணையாக விளையாடுவதற்கான ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. இந்த நிலையில்தான் சஞ்சு சாம்சன் விலக இருக்கும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் வேறு அணியில் இருந்து ஒரு வீரரை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ளாது. தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் தான் வாங்கும். அப்படி இல்லையெனில் காயம் ஏற்பட்ட வீரர்களுக்கான மாற்று வீரர்களாக மட்டுமே தேர்வு செய்யும். எனவே சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு அணி மாறுவது என்பது கடினமான விஷயமே. ஆனால், சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை தங்கள் அணியில் சேர்ப்பதற்கு விருப்பத்துடன் உள்ளதா என்பது புதிராகவே உள்ளது.