சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கான பயிற்சிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள அதிரடி வீரர் சஞ்சு சாம்சனின் பொறுப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் பரவி பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் அஸ்வின் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பாஸ்டரின் கண்காணிப்பில் சஞ்சு சாம்சன் தீவிரமாக ஃபீல்டிங் பயிற்சி செய்து வருகிறார். குறிப்பாக விக்கெட் கீப்பிங் கிளவுஸ் இல்லாமல், பவுண்டரி எல்லையில் உயரமாக வரும் பந்துகளைப் பிடிக்கும் பயிற்சியில் அவர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த அஸ்வின், "சாதாரண வார்ம் அப் கேட்சுகள் மட்டுமல்லாமல், பவுண்டரி எல்லையில் வரும் கடினமான ஹை கேட்சுகளைப் பிடித்து சாம்சன் பயிற்சி செய்கிறார். இது அணியின் புதிய திட்டத்திற்கான அறிகுறியா? அல்லது இது வெறும் வழக்கமான பயிற்சியா?" என்று ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் தோனி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினால் மட்டுமே, விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பேட்டிங்கில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற கேப்டன் ஆயுஷ் மத்ரே உடன் இணைந்து சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு வழங்கிவிட்டு, டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. ஆரம்பம் முதலே சிஎஸ்கே ரசிகர்கள் சாம்சனுக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து சாம்சன் கூறுகையில், "சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக உள்ளேன். தோனியுடன் இணைந்து சுமார் 2 மாதங்கள் ஓய்வறையைப் பகிர்ந்துகொள்ளப் போவதை எண்ணி ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரை அருகில் இருந்து பார்த்து பல கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். புதிய இளம் வீரர்களைக் கொண்டுள்ள சிஎஸ்கே அணிக்கு சாம்சனின் வருகை மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
