மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மீது கேரளா கிரிக்கெட் அணி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன் காரணமாக விஜய் ஹசாரே தொடரில் கேரளா அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிரதான ஒரு நாள் தொடராக கருதப்படுவது விஜய் ஹசாரே தொடராகும்.இந்த போட்டியில் பல முன்னணி வீரர்கள் பங்கு பெறுவார்கள்.தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய விஜய் ஹசாரே தொடரை தேர்வுக்குழு முக்கிய அம்சமாக பார்க்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக விளையாடி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்காக கேரளாவில் பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் பங்கு பெற சஞ்சு சாம்சனுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டும் என்றே இந்த பயிற்சி முகாமில் பங்கு பெறவில்லை.
இதனால் கடுப்பான கேரளா கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி வரும் 21ஆம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சஞ்சு சாம்சன் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
தற்போது தான் டி20 தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருந்தார். இதனால் சாம்சன் ஒரு நாள் அணியிலும் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சஞ்சு சாம்சன் கேரளா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதால் அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதே சமயம் கிரிக்கெட்டில் அனைவரும் ஒன்றுதான் என்பதால் சாம்சன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ரசிகர்கள் சிலர் வரவேற்பும் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இந்திய ஒரு நாள் அணியில் சாம்சன் சேர்க்கப்பட மாட்டார் என தெரிகிறது.