டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் சஞ்சு சாம்சன். சமீபத்தில் உலகக்கோப்பைக்கான அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பெயர் அணியில் இடம் பெறவில்லை.
சிறப்பாக செயல்பட்டும் அணியில் தேர்வு செய்யாததால் பெரும் ஏமாற்றத்துக்கு மத்தியிலும் அவர் அமைதியாக இருந்து வருகிறார். எனினும், ரசிகர்கள் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பு சஞ்சு சாம்சனுக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளது. அவருடன் சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் ஜேசன் ராய்க்கும் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவர்கள் இருவரையும் தங்கள் நாட்டுக்கு வந்து விடுமாறு ஐஸ்லாந்து கிரிக்கெட் கூறி உள்ளது. ஆனால், உண்மையாகவே அவர்களை ஐஸ்லாந்து கிரிக்கெட் அமைப்பு அழைக்கிறதா? அல்லது நகைச்சுவையாக கூறுகிறதா? என்பது தான் தெரியவில்லை.
காரணம் அந்த பதிவில், ஜேசன் ராய் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு ஐஸ்லாந்து தாத்தா - பாட்டி இல்லை, வேறு மாமா பையன் ஆகியோரும் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறோம். அவர்களை நாங்கள் விரைவில் தேடுவோம். எல்லாமே முடிந்து விட்டது என நீங்கள் நினைக்கும் போது நாங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிப்போம் என கூறப்பட்டுள்ளது.
இது நகைச்சுவைக்காக கூறப்பட்டு இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், சில வீரர்கள் இப்படி நாடு மாறி சென்று கிரிக்கெட் ஆடி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், அதில் ரஷித், இம்ரான் தாஹிர், கெவின் பீட்டர்சன், இயான் மார்கன் ஆகியோர் வேறு நாட்டில் இருந்து சென்று தான் இங்கிலாந்து அணியில் கிரிக்கெட் ஆடினார்கள். அந்த வகையில், சஞ்சு சாம்சன், ஜேசன் ராய் கூட ஐஸ்லாந்து அணிக்காக ஆடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.