மும்பை: 2015ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதும், புறக்கணிக்கப்படுவதுமாய் உள்ள ஒரே வீரர் சஞ்சு சாம்சன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் முதல் தொடரிலேயே எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்டார். அன்றைய நிலவரமே இன்றும் நடந்து வருகிறது. இந்த 8 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சஞ்சு சாம்சன் மொத்தமாக 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். எத்தனை தேர்வுக் குழு, எத்தனை கேப்டன்கள் மாறினாலும் சஞ்சு சாம்சனுக்கு மட்டும் போதுமான வாய்ப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் இந்திய அணி நிர்வாகம் மும்பை அணி மற்றும் ரோகித் சர்மா கோட்டாவில் உள்ள இஷான் கிஷனையே தேர்வு செய்து வருகிறது. அவரும் 10 போட்டிகளுக்கு ஒருமுறை நல்ல இன்னிங்ஸை விளையாடி இந்திய அணியில் நீடித்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகினார். இதன்பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் கூட சேர்க்கப்படவில்லை. அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் சராசரியாகவே அமைந்தது. 13 இன்னிங்களில் விளையாடி மொத்தமாக 360 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதனால் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட்டால், நிச்சயம் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷனை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி20 அணியில் மட்டுமே சஞ்சு சாம்சன் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினால் மட்டுமே, அவர் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.