மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ள நிலையில், விரைவில் சஞ்சு சாம்சனும் வெளியேறுவார் என்று கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஓராண்டிலேயே ராகுல் டிராவிட் பொறுப்பை ராஜினாமா செய்திருப்பதற்கு பின் என்ன காரணம் என்ற விவாதங்களும் தொடங்கியுள்ளன.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி கடந்த சில சீசன்களாக நன்றாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதனை அஸ்வின் உடனான நேர்காணலின் போது சஞ்சு சாம்சனும் மறைமுகமாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் திடீரென ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். ராயல்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த அணிகளையும் ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் விளையாட முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ராகுல் டிராவிட் மொத்தமாக ராயல்ஸ் குழுமத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
ராகுல் டிராவிட்டின் இந்த முடிவுக்கு பின் என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்காக வென்று கொடுத்த பின் ராகுல் டிராவிட்டுக்கு மிகப்பெரிய ஆஃபர்கள் வந்தன. மும்பை, டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகள் ராகுல் டிராவிட்டை தொடர்பு கொண்டன. ஆனால் ராகுல் டிராவிட் தனது பழைய அணியான ராஜஸ்தான் அணிக்காக பயிற்சியளிக்க முடிவு செய்தார்.
ஆனால் ராஜஸ்தான் அணியுடன் இணைந்த ஒரே ஆண்டில் ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகிகளே காரணம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. அதேபோல் ராகுல் டிராவிட்டை தொடர்ந்து அடுத்ததாக சஞ்சு சாம்சனை ரிலீஸ் செய்யும் முடிவையும் ராஜஸ்தான் அணி 2 மாதங்களில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் ராஜஸ்தான் அணி முழுமையாக மீண்டும் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கக்காரா ஏற்கனவே அங்கு பணியாற்றி வரும் நிலையில், ராகுல் டிராவிட் இடத்திற்கு சங்கக்காரா கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் ராஜஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர்.