மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி ரன் மழை பொழிந்துள்ளார். இங்கிலாந்து கேப்டன் செய்த ஒரு சிறிய தவறால், சஞ்சு சாம்சன் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 89 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சஞ்சு சாம்சன் அடித்த பந்தை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் கேட்ச் பிடிக்கத் தவறினார். அப்போது சாம்சன் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்தார்.

தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன், அதே ஓவரின் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸரையும், ஆறாவது பந்தில் ஒரு பவுண்டரியையும் விளாசி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து அசத்திய சாம்சன், அதே ஃபார்மை இந்த அரையிறுதியிலும் தொடர்ந்தார். ஒட்டுமொத்தமாக 42 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 89 ரன்கள் குவித்து வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங்கை தனி ஆளாக தாங்கிப் பிடித்ததை அடுத்து சஞ்சு சாம்சனை "பிளவர் இல்லை ஃபயர்" என புஷ்பா பட வசனத்தை சொல்லி கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

சஞ்சு சாம்சன் ஒருபுறம் சிறப்பாக விளையாடினாலும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா மீண்டும் ஏமாற்றமளித்தார். வில் ஜாக்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்து ஃபில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடப்புத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு அரைசதத்தைத் தவிர்த்து, மற்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன் குவிக்கத் தடுமாறி வருகிறார். லீக் சுற்றில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் ரன் ஏதுமின்றியும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 10 ரன்களிலும் அவர் ஆட்டமிழந்திருந்தார்.

எனினும், சஞ்சு சாம்சனின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி 13.1 ஓவர்களிலேயே 160 ரன்களைக் குவித்து மிக வலுவான நிலையை எட்டியது. சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.