வெறும் மூன்றே மேட்ச்சில் உலகக்கோப்பை ஹீரோ சஞ்சு சாம்சன் கதையை முடித்த கம்பீர் - ஸ்ரேயாஸ் கூட்டணி
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அறிமுக வீரராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். வெறும் 3 போட்டிகளின் தோல்வியைக் கொண்டு உலகக் கோப்பை நாயகனை நீக்கிய இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு தற்போது பல விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை நாக்கவுட் போட்டிகளில் 97*, 89 மற்றும் 89 என தொடர்ந்து மூன்று 80-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து இந்தியாவைச் சாம்பியன் ஆக்கியதுடன், தொடர் நாயகன் விருதையும் சஞ்சு சாம்சன் வென்றிருந்தார். ஆனால், அதற்குப் பிறகு விளையாடிய அயர்லாந்து தொடரில் 5, 0 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 1 ரன்னும் மட்டுமே எடுத்தார். இந்த மூன்று ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, உலகக் கோப்பை வென்று தந்த ஒரு வீரரை உடனடியாக நீக்கியது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

15 வயதான இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சமூக வலைதளங்களின் கடுமையான அழுத்தமும், முன்னாள் வீரர்களின் விமர்சனங்களும் சஞ்சு சாம்சனின் நம்பிக்கையைக் குலைத்திருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தத் தேவையற்ற அழுத்தத்தின் காரணமாகவே இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சாம்சன் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல், மிகவும் தடுமாறி 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மைதானத்தில் சஞ்சு சாம்சனுடன் நீண்ட நேரம் தனியாக உரையாடினார். தற்காலிகமாக அவருக்கு ஓய்வளிப்பது குறித்தும், வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்தும் அவர் சாம்சனிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது.
வீரர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்க வேண்டும் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிற இந்திய அணி உதவி பயிற்சியாளர்கள் கூறினாலும், உலகக் கோப்பை ஹீரோவை மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை என நீக்கியிருப்பது இந்திய அணியின் தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளையே காட்டுகிறது.
ஒருவேளை இந்த தொடரில் இந்திய அணி இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பின் சுழற்சி முறையில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தால் இந்த விவாதமே எழுந்து இருக்காது. அதற்கு முன்பே சஞ்சு சாம்சனை நீக்கி இருப்பது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
