கொச்சி: கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தனது மகனை பழி வாங்குவதாக சஞ்சு சாம்சன் தந்தை கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். விஜய் ஹசாரே தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி முகாமில் தாம் பங்கேற்கவில்லை என முறைப்படி சஞ்சு சாம்சன் அறிவித்தும் அவரை கேரள அணியில் இருந்து அம் மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகள் அதிரடியாக நீக்கினார்கள்.
இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சஞ்சு சாம்சன் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், கேரள கிரிக்கெட் சார்ந்த நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் என்னுடைய மகனுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள். என் மகன் அப்படி என்ன தவறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. கேரள சங்க நிர்வாகிகள் குறித்து நாங்கள் இதுவரை எந்த ஒரு எதிர் கருத்தையும் தெரிவித்தது கிடையாது.
ஆனால் தற்போது நிலைமை கையை மீறி சென்று விட்டது. கேரள அணி பயிற்சி முகாமில் மற்ற வீரர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடுவதற்கு கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள். நான் கேரள கிரிக்கெட் சங்க தலைவர் ஜே எஸ் ஜார்ஜையோ, இல்லை செயலாளர் வினோத்குமார் மீதோ எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.
இவர்களுக்கு நடுவே இருக்கும் சின்ன சின்ன நிர்வாகிகள் தான் அனைத்தையும் தவறாக மாற்றுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் நயவஞ்சகத்துடன் செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் விளையாட்டு வீரர்கள். எங்களுக்கு விளையாட்டு என்பது ஒரு வர்த்தகம் கிடையாது.என்னுடைய மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். சஞ்சு சாம்சன் மீது ஏதேனும் தவறு இருந்தால் நிச்சயமாக அது குறித்து விவாதித்து அதனை தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று விஸ்வநாத் சாம்சன் கூறியுள்ளார்.