திருவனந்தபுரம்: ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கேரளா அணி தடுமாறிய போது, நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறங்கி சஞ்சு சாம்சன் அணியை மீட்டெடுத்துள்ளார். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தி இருக்கிறார். சஞ்சு சாம்சனின் பொறுப்பான இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால், சஞ்சு சாம்சனை நம்பர் 5 வரிசைக்கு இந்திய அணி நிர்வாகம் மாற்றியது. அந்த பேட்டிங் வரிசையிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார். கேரளா அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், ரஞ்சி டிராபியிலும் நம்பர் 5 பேட்ஸ்மேனாக களமிறங்கி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேரளா அணி விளையாடி வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி ருதுராஜ் கெய்க்வாட்டின் பொறுப்பான ஆட்டத்தால் 239 ரன்களை எடுத்தது. 18 ரன்களுக்கு மகாராஷ்டிரா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 91 ரன்களை குவித்தார். இதையடுத்து மழை காரணமாக ஆட்டம் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் கேரளா அணி பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்க வீரர் அக்ஷய் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் பாபா அபராஜித் 6 ரன்களிலும், குன்னுமல் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கேரளா அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின் நம்பர் 5 பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் களம் புகுந்தார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இதனால் 51 பந்துகளில் அரைசதம் அடித்த அசத்திய சஞ்சு சாம்சன், கேரளா அணியின் ஸ்கோரையும் 100 ரன்களுக்கு மேல் விரைவாக எடுத்து சென்றார். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.