விசாகப்பட்டினம்: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தடுமாறி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சனுக்கு, பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தியிருக்கிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடினால், அவர் மீண்டும் சிறப்பான ஃபார்முக்கு திரும்புவார் என மோர்கல் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மூன்று டி20 போட்டிகளில் சாம்சன் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து திணறினார்; அதிகபட்சம் 10 ரன்களே அவர் எடுத்தார். ஆனால், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அதிரடியாகச் சமாளித்து ரன்களைக் குவித்துவருகின்றனர்.

நான்காவது டி20 போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மோர்கல், "சஞ்சு ஒரு இன்னிங்ஸ் ஆடிவிட்டால், அவரது நம்பிக்கையும் ஃபார்மும் மீண்டும் திரும்பிவிடும். உலகக் கோப்பைக்கு தயாராகும் வேளையில், வீரர்கள் சரியான நேரத்தில் உச்சபட்ச ஃபார்மை அடைவது முக்கியம். அவர் நன்றாக பயிற்சி செய்கிறார், பந்துகளை மிகச் சிறப்பாகவும் அடிக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
சாம்சனின் ஃபார்ம் தனக்குக் கவலை அளிக்கவில்லை என மோர்கல் தெளிவுபடுத்தினார். இது குறித்து பேசிய அவர் "சஞ்சு தனது திறனை வெளிப்படுத்த இது காலத்தின் ஒரு பகுதிதான். அணியின் வெற்றிதான் முதன்மையானது. இப்போது தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளோம். வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். உலகக் கோப்பைக்கு முன் சில போட்டிகள் உள்ளன. சஞ்சு நிச்சயம் ஃபார்மை மீட்டெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை" என்று மோர்க்கல் கூறினார்.
வீரர்கள் விரும்பினால் பயிற்சிக்கு வரலாம் என்றபோதும், சஞ்சு சாம்சன் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, அபிஷேக், ஆகியோர் பந்துவீச்சை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் ரிதத்தை மீட்டெடுத்து, ACA-VDCA மைதானத்தின் அனைத்து மூலைகளிலும் பந்துகளை விரட்டினார்.தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோட்டக் ஆகியோருடன் அவர் நீண்ட நேரம் சாம்சன் உரையாடினார்.