மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்குவதற்கான பணிகளை சிஎஸ்கே அணி சைலண்ட்டாக மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளதன் மூலமாக சுமார் ரூ.10 கோடி கையிருப்பில் வந்துள்ள நிலையில், சுமார் ரூ.30 கோடி தொகையுடன் சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய போதும், தோனி அந்த பொறுப்பை எடுத்தார். ஆனாலும் சிஎஸ்கே அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. இதனால் சீசனுக்கு இடையிலேயே டிவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் ஆகிய மூவரையும் அணிக்குள் கொண்டு வந்தது.

இதன்பின் சில வெற்றிகளைப் பெற்றாலும், அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கிறது. அதற்கேற்ப சிஎஸ்கே அணியை தயார் செய்ய வேண்டும் என்று தோனி முடிவு செய்துள்ளார். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்குள் சஞ்சு சாம்சனை கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ராஜஸ்தான் அணியின் டிமாண்ட் காரணமாக சிஎஸ்கே அணி பேச்சுவார்த்தை முறித்தது.
ஆனாலும் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக ஆட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதனால் எந்த அணிக்கும் டிரேட் செய்ய ஒப்புக் கொள்ளாமல், நேரடியாக மினி ஏலத்தில் பங்கேற்க சஞ்சு சாம்சன் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் மினி ஏலத்தில் கொஞ்சம் கூடுதல் தொகையுடன் பங்கேற்க தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார். கடந்த மெகா ஏலத்தில் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. இதன் மூலமாக சிஎஸ்கே அணியின் கையிருப்பில் ரூ.9.80 கோடி இருக்கிறது. கடந்த சீசனில் மோசமாக ஆடிய ராகுல் த்ரிப்பாட்டி ரூ.3.40 கோடிக்கும், தீபக் ஹூடா ரூ.1.70 கோடிக்கும், விஜய் சங்கர் ரூ.1.20 கோடிக்கும் வாங்கி இருந்தது.
அதேபோல் ஜேமி ஓவர்டனை விடுவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இவர்களோடு ரச்சின் ரவீந்திராவையும் ரிலீஸ் செய்தால், சிஎஸ்கே அணியின் கையிருப்பில் ரூ.21.65 கோடி இருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அணிகளின் தொகை ரூ.5 கோடி வரை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிஎஸ்கே அணியால் எளிதாக சுமார் ரூ.30 கோடி தொகையுடன் மினி ஏலத்தில் பங்கேற்க முடியும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் சஞ்சு சாம்சனை ரூ.20 கோடி வரை கொடுத்து மினி ஏலத்தில் தாராளமான வாங்க முடியும். இதன் காரணமாகவே அஸ்வினிடம் பேசி சிஎஸ்கே அணி ஓய்வு பெற வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் மினி ஏலம் மீதான எதிர்பார்ப்பும் சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.