சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத சஞ்சு சாம்சன் குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைப் பார்க்கும்போது அவர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பது போலத் தெரிவதாக அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தொடர் நாயகன் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நமீபியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சனுக்குத் தொடக்க வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. களமிறங்கிய வேகத்தில் 3 சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். ஆனால் வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், "சஞ்சு சாம்சனைப் பார்க்கும்போது அவர் ரன்களைத் தேடி அலைவது போலத் தெரிகிறது. அவரது மனதில் ஏதோ பல விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. மிகத் தெளிவாக அவர் இல்லை. நமீபியா பந்துவீச்சாளர் பென் ஷிகோங்கோ வீசிய அந்த மெதுவான பந்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. பந்து வரும்போது மிகவும் சாதாரணமாக ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்துவிட்டுச் சென்றார்."
"ஒரு பேட்ஸ்மேன் எந்தத் தெளிவும் இல்லாமல் இருக்கும்போதுதான் இதுபோன்ற விக்கெட்டுகள் விழும். இந்த மனநிலை எந்த ஒரு வீரரையும் பாதிக்கும். அவர் அதிகப்படியான யோசனைகளைத் தவிர்த்துவிட்டு, பயமில்லாமல் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை" என்று அஸ்வின் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், " சஞ்சு சாம்சனுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அபிஷேக் சர்மா அணிக்குத் திரும்ப வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். ஏனெனில் அவர் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக மாறிவிட்டார்" என்று தெரிவித்தார்.
நமீபியா கேப்டன் எராஸ்மஸின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் சிரமப்பட்டதையும் அஸ்வின் சுட்டிக்காட்டினார். "நமீபியா பந்துவீச்சாளர் எராஸ்மஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியைத் திணறடித்தார். பந்து நின்று வந்தது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்று அஸ்வின் எச்சரித்துள்ளார்.