லண்டன்: 2021ஆம் ஆண்டில் மோசமான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியை, முன்னணி அணிகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கூறியதாக ராஜஸ்தான் அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக ராஜஸ்தான் அணி வளர்ச்சி கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு உள்ளது. முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்த சீசன்களில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 8 அணிகள் ஆடும் ஐபிஎல் தொடரில் 7வது இடத்தை நிரந்தரமாக ராஜஸ்தான் அணி குத்தகைக்கு எடுத்திருந்தது. இதனால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் குறைந்துகொண்டே சென்றனர்.

ஆனால் 2021ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்ததன் மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரில் உச்சத்தை எட்டியுள்ளது. 2021ஆம் ஆண்டு மோசமான ஆடினாலும், ஸ்டார் வேல்யூ உள்ள வீரர்களையும், திறமையான இளம் வீரர்களையும் ஏலத்தில் வாங்கியது. அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலத்திற்கு ஐபிஎல் அணி இல்லாததால், அங்குள்ள சினிமா நட்சத்திரங்களுக்கு ஆர்ஆர் ஜெர்சியை அனுப்பி வைத்து ரசிகர்களை உருவாக்க தொடங்கியது.
இதனிடையே சஞ்சு சாம்சனின் ஆட்டமும் உச்சத்தை எட்ட, அவரின் ரசிகர்கள் இந்தியா முழுவதும் உருவாகினார்கள். இதன் மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ஆர்சிபி அணிக்கு பின் அதிக பலம் கொண்ட அணியாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு மோசமான நிலையில் ராஜஸ்தான் அணி இருந்த போது, அந்த அணியை விட்டு சஞ்சு சாம்சன் வெளியேற மறுத்து பேசியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளர் ராஜாமணி கூறுகையில், 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி சிறப்பாக அமையவில்லை. அப்போது நள்ளிரவில் நானும் சஞ்சு சாம்சன் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அடுத்த ஆண்டில் டாப் ஐபிஎல் அணியுடன் நாம் இருக்க வேண்டும். அதற்கு இருவரும் சிறப்பாக இந்த சீசனில் செயல்படுவோம் என்று சஞ்சு சாம்சனிடம் கூறினேன்.
ஆனால் சஞ்சு சாம்சன் உடனடியாக, நாம் இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியை டாப் அணியாக மாற்றுவோம் என்று கூறினார். அப்போதே ரவிச்சந்திரன் அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் வாங்குவோம் என்று முடிவெடுத்துவிட்டார். என்னை பொறுத்தவரை அடுத்த எம்எஸ் தோனி சஞ்சு சாம்சன் தான் என்று தெரிவித்தார்.