மும்பை: இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தான் சஞ்சு சாம்சனை மட்டுமே குறை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மை காலமாக இந்திய அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களையும் கோபமடைய செய்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் சுனில் கவாஸ்கரின் கோபம் உச்சத்திற்கு சென்ற நிலையில், அடுத்ததாக கபில் தேவ் இந்திய வீரர்களை விளாசி தள்ளினார். இந்திய வீரர்கள் அதிக பணம் சம்பாதிப்பதால், ஈகோவும் திமிரும் அதிகமாக இருப்பதாக விமர்சித்தார்.

கபில் தேவ் போன்ற ஜாம்பவானின் விமர்சனம் இந்திய வீரர்களையே உலுக்கியது. இதையடுத்து இந்திய வீரர் ஜடேஜா, கபில் தேவ் விமர்சனத்திற்கு நிதானமாக பதில் அளித்தார். இதையடுத்து நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 49 நாட்களே உள்ள நிலையில், மோசமான அணியாக கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வியடைந்துள்ளது.
உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி களமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரை பார்க்காமல், பேக் அப் வீரர்களை களமிறக்கி விளையாடி வந்தது. இதனால் பதறிய இந்திய ரசிகர்கள், மெயின் டீம் எங்கே என்று கொந்தளித்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி கபில் தேவ் பேசுகையில், இந்திய அணியில் சிராஜின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் சிராஜ் அதிகமாக பவுன்சர் பந்துகளை வீசுகிறார். பவுன்சர் பந்துகளை வீசும் போது, அதில் எவ்வளவு பின்னடைவு ஏற்படுகிறது என்பதையும் கவனத்தை கொள்ள வேண்டும்.
சிறப்பாக பந்துவீசினாலும் திட்டத்திற்கேற்ப பந்துகளை வீசும் வீரராகவும் சிராஜ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் அணிக்கும் அவருக்கும் வெற்றியை கொடுக்கும். அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். ஏனென்றால் அதுதான் இந்திய கிரிக்கெட்டின் அடித்தளம். அந்த அளவில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடினால், ஜூனியர் வீரர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதற்காக பலரும் சஞ்சு சாம்சனை விமர்சித்து வருகிறார்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் சஞ்சு சாம்சனை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள். இந்திய அணி மொத்தமாக தோல்வியடைந்திருக்கிறது. சஞ்சு சாம்சன் மட்டும் தோல்வியடையவில்லை என்று தெரிவித்தார்.