ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரியான் பராக் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டு இருந்தது.
அதனால், அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் சிறிது காலத்திற்கு விக்கெட் கீப்பிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது. அதே சமயம் அவர் பேட்டிங் செய்யலாம் எனவும் கூறியிருந்தது. இதை அடுத்து ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரராக ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் இடம் பெற முடிவு செய்தார் சாம்சன்.

அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தற்காலிகமாக அவர் விலகினார். முதல் மூன்று போட்டிகளில் மட்டும் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அந்த மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடினார்.
இந்த மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் மட்டும் 66 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளில் 13 ரன்கள் மற்றும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், இந்த மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்தது.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நெட் ரன்ரேட்டும் மோசமாக உள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக அணியை சரியாக வழிநடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியின் போது சஞ்சு சாம்சன் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. அப்போது முதல் அவர் கேப்டன் பொறுப்பை தொடர்ந்து ஏற்பார்.