மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் கிரிக்கெட்டில் தாம் சந்தித்த பல அனுபவங்கள் குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உடன் உரையாடி இருக்கின்றார்.அதில் தற்போது சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறிகிறாயா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அஸ்வினுடன் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் முதல் கேள்வியாகவே, அஸ்வின் உன்னைப் பற்றி பல வதந்திகள் வருகிறதே, நீ ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறப் போகிறாயா என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன், எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. கடவுள் என்ன வழி காட்டுகிறாரோ அதன்படி செல்ல வேண்டியது தான் என்று பதில் அளித்தார். ராஜஸ்தான் அணி தமது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான அணியாக இருந்தது. அங்கு நான் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன்.
ராகுல் டிராவிட் உடனான உறவு எனக்கு மிகவும் முக்கியமாக அமைந்தது என்றார். இதனைத் தொடர்ந்து அஸ்வின், தற்போது டி20 கிரிக்கெட்டில் நீ சதம் சதமாக அடித்து வந்தாய். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அஸ்வின், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நான் டக் அவுட் ஆனேன்.
அதன்பின் நான் மிகவும் மனம் உடைந்து அமர்ந்திருந்தேன். அப்போது வந்த பயிற்சியாளர் கம்பீர், ஏன் நீ இவ்வாறு அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு, என்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை என்ற வருத்தமாக இருக்கிறது என்று கூறினேன்.
அதற்கு பதில் அளித்த கம்பீர், நீ 21 முறை டக் அவுட் ஆனால் கூட நான் உனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவேன். உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன் என்று நம்பிக்கை கொடுத்தார். பயிற்சியாளரின் இந்த பேச்சு எனக்கு நம்பிக்கை அளித்தது. இதேபோன்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தபோது டி20 அணியின் கேப்டனாக அப்போது அறிவிக்கப்பட்டு இருந்த சூரிய குமாரும் என்னை சந்தித்தார்.
அதில் தற்போது நமக்கு ஏழு டி20 போட்டிகள் வரப்போகிறது. இந்த ஏழு போட்டிகளிலும் உன்னை நான் தொடக்க வீரராக களமிறக்க உள்ளேன். நீ அதில் சரியாக விளையாடவில்லை என்றால் கூட அந்த ஏழு போட்டிகளில் தொடர்ந்து உனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இப்படி சூரிய குமாரும் கம்பீரும் பேசிய விதம்தான் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தது. முதலில் பத்து பந்துகளில் 30 ரன்கள் அடிக்கும் வீரராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன் பின் ஏன் நம்மால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது என்று தோன்றியது. இதனால் அதிரடி காட்டி விளையாடி வருகிறேன். இப்போதெல்லாம் என்னுடைய மனது என்ன சொல்கிறதோ, அதன்படி தான் நடக்கின்றேன் என்று சஞ்சு சாம்சன் கூறினார்.