சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், நீண்டகாலமாக தான் விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
சஞ்சு சாம்சன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் சிஎஸ்கே அணிக்கு மாறினார். ராஜஸ்தான் அணிக்காக 2013 முதல் 2015 வரையிலும், பின்னர் 2018 முதல் 2025 வரையிலும் என மொத்தம் 11 சீசன்களில் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பிரம்மாண்டமான சாதனையும் அவரிடமே உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு வீரர், அதுவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் திடீரென அணியை விட்டு விலகியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனது காலம் முடிந்துவிட்டதாக நான் முழுமையாக உணர்ந்தேன். அதனால் தான் அந்த அணியில் இருந்து வெளியேறி சிஎஸ்கே அணியில் இணைந்து புதிய பயணத்தை தொடங்கியுள்ளேன் எனக் கூறி இருக்கிறார்.
2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கான தனது முதல் போட்டியிலேயே சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கவுகாத்தியில் எதிர்கொள்ளவுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நான் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆனால் மைதானத்திற்குள் நுழைந்த பிறகு உணர்ச்சிகளுக்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன். எனது பழைய அணியாக இருந்தாலும் சிஎஸ்கே அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்துவேன்.

ராஜஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மீது எனக்கு எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அங்குள்ள பலருடன் நான் சிறுவயது முதலே விளையாடியுள்ளேன். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு காலகட்டம் இருக்கும். ராஜஸ்தான் அணியுடனான எனது காலம் முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணியுடனான இந்த புதிய பயணம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. பழைய அணிக்கு எதிராக களமிறங்கினாலும் எந்தவித அழுத்தமும் இன்றி மிகுந்த மகிழ்ச்சியுடனேயே விளையாடுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
