ஜெய்ப்பூர்: இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன்சி தான் சஞ்சு சாம்சன் வெளியேற காரணம் என விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஸ்ரீகாந்தின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், தன்னை ஏலத்தில் விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
2013 முதல் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராகவும், 2021 முதல் கேப்டனாகவும் இருந்து வரும் சாம்சனின் இந்த திடீர் முடிவு, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் சிஎஸ்கே அணிக்கு மாற இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.
இந்த சூழ்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "சமீபத்தில் வெளிவரும் செய்திகளைப் பார்க்கும்போது, சஞ்சு சாம்சனுக்கும், ராகுல் டிராவிட்டுக்கும் இடையே ஒருவிதமான கருத்து வேறுபாடு இருப்பது போல் தெரிகிறது. ஆனால், அது பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது" என்று கூறியுள்ளார்.
மேலும், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை பெரும் தொகைக்கு தக்க வைத்து, அவரைச் சுற்றியே அணியை கட்டமைத்துள்ளது. திடீரென அவரை விடுவித்தால், அணியின் சமநிலை என்னவாகும்? ஒருவேளை, அவர்கள் ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க விரும்பினால், அது அவர்களின் விருப்பம். ஆனாலும், சஞ்சு சாம்சனை ஒரு பேட்ஸ்மேனாகவாவது அணியில் வைத்திருக்க வேண்டும்" என்று ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் 2025 சீசனின் தொடக்கத்தில், சஞ்சு சம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அசாம் மாநில அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட ரியான் பராக், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது, அணி நிர்வாகம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக அமைந்தது. இந்த சூழலில்தான், சஞ்சு சாம்சன் வெளியேறினால், ரியான் பராக் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் வலுத்து வருகின்றன.
சஞ்சு சாம்சனுக்கும், ராகுல் டிராவிட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்ததாகவே செய்திகள் வெளிவந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்க முயன்றபோது, டிராவிட் தான் அவருக்கு ஆதரவாக இருந்து காப்பாற்றினார் என சஞ்சுவின் தந்தையே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படி இருக்கையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேறினால், அவரை தங்கள் அணியில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வமாக இருப்பதாகவும், தோனிக்கு சரியான மாற்று வீரராக சாம்சன் இருப்பார் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். எது எப்படியோ, ஸ்ரீகாந்தின் இந்த கருத்து, ஐபிஎல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. சஞ்சு சாம்சன் - டிராவிட் இடையேயான மோதல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது விரைவில் தெரியவரும்.