மும்பை: ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு கம்சனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்று கூறிவிட்டதாகவும், டிரேட் மூலமாக வேறு அணிக்கோ அல்லது ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யவோ சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஷேன் வார்னே, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் ராஜஸ்தான் அணியின் முகமாக இருப்பவர் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் செய்யப்பட்ட பின்னரே அந்த அணி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெறத் தொடங்கியது. மற்ற அணிகள் தரப்பில் சஞ்சு சாம்சனுக்கு வலைவிரித்த போதும், அவர் ராஜஸ்தான் அணிக்கு உண்மையாக இருந்து வந்தார்.

ஆனால் கடந்த சீசனில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகிய போது, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் செய்யப்பட்டார். கவுகாத்தியில் ராஜஸ்தான் அணி விளையாடியதால், உள்ளூர் வீரரை கேப்டனாக நியமனம் செய்யலாம் என்ற வகையில், அந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவுக்கு பின்னணியில் ரியான் பராக்கின் உறவினர் ரஞ்சித் பர்தாகூர் இருந்தார்.
ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ரஞ்சித் பர்தாகூரும் ஒருவர். இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. ராகுல் டிராவிட் - ரியான் பராக் ஆகியோரின் ஆலோசனையின் போதும் கூட, சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. அந்த வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகியது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாகப் பேச்சுகள் எழுந்தன. தோனியின் இடத்தில் சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே முயற்சிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதற்கேற்ப அமெரிக்காவில் நடந்த மேஜர் லீக் தொடரின் போது சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளை சஞ்சு சாம்சன் சந்தித்திருந்தார். அதன் புகைப்படங்கள் வெளியாகியது.
இதனால் சஞ்சு சாம்சனை சமாதானம் செய்யும் முயற்சியில் சிஎஸ்கே அணி ஈடுபட்டு வருவதாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் திட்டத்திலோ, மெகா ஏலத்திற்கு முன் ரிலீஸ் செய்யும் திட்டத்திலோ ராஜஸ்தான் அணி நிர்வாகம் இல்லை என்று அந்த அணிக்கு நெருக்கமாக இருக்கும் நபர் கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தொடர்வார் என்று தெரிவித்திருந்தார். தற்போது, ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை விடுவிக்கும் படி சஞ்சு சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சன் தரப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் வேறு அணிக்கு டிரேட் செய்ய வேண்டும் அல்லது ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சஞ்சு சாம்சன் கேட்டிருக்கிறார். அதேபோல் சஞ்சு சாம்சன் குடும்பத்தினரும், ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து விளையாட சஞ்சு சாம்சன் விரும்பவில்லை என்று கூறியதாகக் கூறப்படுகிறது. அதேபோல் அவருடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள சர்வதேச வீரர்களும் ராஜஸ்தான் அணிக்கும் சாம்சனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருக்கின்றனர்.