ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் ஒருவர், இரவு 8 மணி போட்டிக்கு மாலை 5 மணிக்குதான் எழுந்து தயாராவார் என்று அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் சஞ்சு சாம்சன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்றார். அப்போது, கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் இருக்கிறது என்று தான் ஆரம்பத்தில் நம்பியதாகவும், ஆனால் சில வீரர்களின் செயல்பாடுகளைப் பார்த்த பிறகு தனது கண்ணோட்டம் மாறியதாகவும் சாம்சன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தனது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ஷிம்ரன் ஹெட்மையரின் ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். அவர் எப்படி போட்டிக்கு முன் தயார் ஆவார் என்பதை பற்றி கூறினார்.
இதுகுறித்து சாம்சன் பேசுகையில், "நான் கேப்டனாவதற்கு முன்பு, எனக்கென சில பழக்கவழக்கங்களை வைத்திருந்தேன். இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கி, காலையில் எழுந்து பயிற்சி செய்வது, சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது என ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தேன். இப்படி இருந்தால் மட்டுமே கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும் என்று நம்பினேன்," என்றார்.
"ஆனால், ஷிம்ரன் ஹெட்மையர் போன்ற வீரர்களை சந்தித்த பிறகு என் எண்ணம் மாறியது. அவர் இரவு 8 மணிக்கு போட்டி என்றால், மாலை 5 மணிக்குதான் உறங்கி எழுவார். அணி கூட்டத்தில் கூட தூக்கக் கலக்கத்துடன்தான் இருப்பார். ஆனால், களத்தில் இறங்கிவிட்டால் அணிக்குத் தேவையான முக்கியமான ரன்களை அடித்து, வெற்றியைத் தேடித் தருவார்," என்று சாம்சன் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.
ஹெட்மையரின் இந்த வித்தியாசமான அணுகுமுறையைப் பார்த்த பிறகு, கிரிக்கெட்டில் வெற்றிபெற பல வழிகள் உள்ளன என்பதைத் தான் உணர்ந்துகொண்டதாக சாம்சன் கூறினார். ஒரு வீரரின் ஒழுக்கத்தை விட, களத்தில் அவர் வெளிப்படுத்தும் திறமையே முக்கியம் என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷிம்ரன் ஹெட்மையர், தனது அதிரடியான பேட்டிங்கிற்காக அறியப்பட்டவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பல போட்டிகளில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஒழுக்கமற்ற அணுகுமுறை காரணமாக சில சமயங்களில் அணியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக இருந்துகொண்டு, தனது சக வீரரின் ஒழுக்கமின்மையை சாம்சன் வெளிப்படையாகப் பேசியிருந்தாலும், ஹெட்மையரின் திறமையை பாராட்டியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இது, ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் இருக்கலாம், ஆனால் களத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதே முக்கியம் என்பதை சஞ்சு சாம்சன் இந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.