"நான் சிஎஸ்கே-வுக்கு போகிறேன்.. ராஜஸ்தான் சஞ்சு இல்லாமல் ஆட தயாராகி விட்டது".. மனம் திறந்த சாம்சன்
சென்னை: ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வந்த சஞ்சு சாம்சன், அந்த அணியில் இருந்து விலகி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது ஏன் என்பது குறித்த பின்னணியை முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார்.
2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல் அணி மாற்றம் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் மாறினார். இது குறித்து ஜியோஸ்டார் தொலைக்காட்சியின் 'சூப்பர்ஸ்டார்ஸ்' நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறுவது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். 5 ஆண்டுகள் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கான நேரம் முடிந்துவிட்டதை உணர வேண்டும். 2025 ஐபிஎல்-க்கு பிறகு, இனி நான் அணியை விட்டு நகர வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இப்போது சஞ்சு சாம்சன் இல்லாமலும் விளையாடத் தயாராகிவிட்டது என்பதை உணர்ந்த பிறகே, நான் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன்" என்றார்.
ராஜஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு தனக்கு 2 முதல் 3 அணிகளிலிருந்து அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்ட சஞ்சு சாம்சன், "என்னிடமிருந்த வாய்ப்புகளில் நான் சிஎஸ்கே-வைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் மஹி பாய் (தோனி) மீதான ஈர்ப்பும், எனது சிறந்த நண்பரான ருதுராஜ் கெயிக்வாட்டுடன் எனக்கு இருக்கும் நல்லுறவும் தான். சிஎஸ்கே அணியின் கலாச்சாரம் எனது இயல்புக்கும் விளையாட்டுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் என நினைத்தேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது சஞ்சு சாம்சன் விலக ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் அதை சஞ்சு சாம்சன் இந்த பேட்டியில் சூசகமாக கூறி இருப்பதாகவே தெரிகிறது.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த முதல் சீசனிலேயே (ஐபிஎல் 2026) தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 1 அரைசதத்துடன் 477 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
