மும்பை: ஐபிஎல் மினி ஏலத்தில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளும் நேரடி போட்டியில் ஈடுபடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்ததற்கு பின், தோனி சில கணக்குகளை வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் அஸ்வினின் நேர்காணல் ஒன்றில் பேசிய சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியில் இருந்து விலக உள்ளதை மறைமுகமாக அறிவித்தார். ராஜஸ்தான் அணியில் கால்பந்து தான் பயிற்சியின் போது ஆடப்படும் முதல் விளையாட்டாக இருக்கிறது என்று அஸ்வின் சொல்ல, அதனை அப்படியே சஞ்சு சாம்சன், கால்பந்து முதல் விளையாட்டாக இருந்தது என்று கூறினார்.

இதன் மூலமாக ராஜஸ்தான் அணி நிர்வாகத்துடன் தனக்கு மோதல் இருப்பதையும் சஞ்சு சாம்சன் உறுதி செய்தார். இதனால் சஞ்சு சாம்சனுடன் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு சஞ்சு சாம்சன் உடன்பட, உடனடியாக ராஜஸ்தான் அணியுடன் டிரேட் பேச்சுவார்த்தையை சிஎஸ்கே தொடங்கியது. ஆனால் சிவம் துபே அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டை கேட்டதால், சிஎஸ்கே பின் வாங்கியது.
இதன்பின் சஞ்சு சாம்சனை வாங்க கேகேஆர் அணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையும் முழுமை பெறவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமல்லாமல் ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட பலரையும் விடுவிக்க தயாராகி வருகிறது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் குறைந்தபட்சம் ரூ.25 கோடியுடன் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கேகேஆர் அணியும் சஞ்சு சாம்சனை மினி ஏலத்தில் வாங்க தீவிரமாக முயற்சிக்கும்.
அதற்காக வெங்கடேஷ் ஐயரை விடுவிக்க கேகேஆர் அணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளும் சுமார் ரூ.25 கோடிக்கும் அதிக தொகையுடன் மினி ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு தீவிரமான முயற்சிகள் நடக்கும் என்றும், நேரடியாக சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக் கொள்ளும் என்றும் கருதப்படுகிறது.
அதேபோல் சஞ்சு சாம்சனை வாங்குவதில் தோனி கொஞ்சம் பிடிவாதம் காட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக ரூ.20 கோடி வரை சஞ்சு சாம்சனுக்கு பட்ஜெட் ஒதுக்கி சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.