மும்பை: கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் 3 சதங்களை விளாசியது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது என்று சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக என்னைப் பற்றி வெளியில் பேசி வந்த விஷயங்களை கடந்து எனக்குள் என்ன ஓடுகிறது என்பதை கடந்து வரவே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவாகி இருக்கிறார் சஞ்சு சாம்சன். தொடக்க வீரராக சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன், திடீரென சுப்மன் கில்லின் கம்பேக் காரணமாக மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் கொஞ்சமும் அசராத சஞ்சு சாம்சன், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் சஞ்சு சாம்சனிடம் இல்லையென்றாலும், 2 டாட் பால்கள் வந்ததும் உடனடியாக பவுண்டரிக்கு செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை அணுகுமுறை அவருக்கு கை கொடுத்திருக்கிறது. இதனால் இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற சியட் விருது விழாவில் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட சஞ்சு சாம்சன் கொஞ்சம் எமோஷனலாக பேசி இருக்கிறார். முதலில் அந்த விருதினை தனது மனைவிக்கு அர்ப்பணிப்பதாக சஞ்சு சாம்சன் அறிவித்தார்.
இதன்பின் சஞ்சு சாம்சன் பேசுகையில், என்ன நடந்தாலும் எனது வேலையை சரியாக செய்து கொண்டே இருந்திருக்கிறேன். அமைதியாக, பொறுமையாக உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு தடைகளை கடந்து வந்துள்ளேன். வெளியில் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை கடந்து, என் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை உணரவே 10 ஆண்டுகளாகிவிட்டது.
எதில் கவனம் செலுத்த வேண்டும், எதில் கவன செலுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். சரியாக வாய்ப்பு கிடைத்த போது, 5 டி20 போட்டிகளில் விளையாடி 3 சதங்களை அடித்தேன். அது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிவித்தார். சஞ்சு சாம்சனின் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.