டெல்லி: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தொடர் நாயகனான சஞ்சு சாம்சன், 321 ரன்கள் குவித்தார். இது டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த சூழலில் டி20 உரககோப்பை வென்ற இந்திய அணிக்கு டெல்லியில் நடைபெற்ற நமன் விருது விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அரையிறுதி, நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு எதிராக கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து மூன்று அரை சதங்களை விளாசினார். டெல்லியில் பிசிசிஐ நமன் விருதுகள் விழாவில் பேசிய சாம்சன் "நான் இப்படி ஒன்றைச் செய்ய விரும்பினேன். திடீரென, அணி என்னை விளையாட கேட்டபோது, என் மனநிலை மாறியது. அதற்கு முன், நியூசிலாந்து தொடரில் என்னுடைய கவனம் என் மீதே இருந்தது," என்றார்.

"உலகக் கோப்பையில், கவனம் முழுவதும் அணி மீதே இருந்தது. அணிக்கு என்ன தேவை என சிந்தித்து, ஜிம்பாப்வே போட்டி முதல், பங்களிக்க விரும்பினேன். எனக்கு ஒரு பங்கு கிடைத்தது. 'சஞ்சு, அணிக்கு நீ தேவை. உன்னால் முடிந்த சிறந்ததை செய்’ என்ற நம்பிக்கை வந்தது. அங்கிருந்துதான் அனைத்தும் தொடங்கியது. நான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இருந்தேன்," என அவர் விவரித்தார்.

இந்தியா கோப்பையை வென்று ஏழு நாட்களாகியும், அந்த வெற்றி தனக்கு இன்னும் முழுமையாக உணர முடியவில்லை என்றார் சாம்சன். "இன்னும் இல்லை," எனத் தெரிவித்த அவர், "காலையில் எழுந்தால், 'இது நிஜமாகவே நடந்ததா?' என்று தோன்றுகிறது," என்றார்.

ஆனால், இந்திய அணி இதோடு நின்றுவிடாது என சாம்சன் உறுதியளித்தார். "நமது திறமையான வீரர்களின் தரத்தைப் பார்க்கும்போது, இத்தகைய வெற்றி தொடரும். இது ஒருமுறை நடப்பதில்லை. மேலும் பல வீரர்கள் உருவாவதால், இந்தியா இதுபோன்ற வெற்றிகளை மிக அடிக்கடி பெறும்," என சாம்சன் தெரிவித்தார். தங்களது தொடக்க ஜோடி குறித்து பேசிய அவர், அபிஷேக் நானும் நெருப்பும், பனியும் போன்றவர்கள் அல்ல. இருவரும் நெருப்பு தான், நான் தடுமாறினால் அவர் பார்த்து கொள்வார். அவர் தடுமாறினால், நான் பார்த்து கொள்வேன் என்று சஞ்சு சாம்சன் கூறினார்.