மும்பை : இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் உள்ளூர் டி20 தொடரில் ஆடி வருகிறார்.
பிசிசிஐ நடத்தும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் சஞ்சு சாம்சன் பங்கேற்றுள்ளார். தன் சொந்த மாநிலமான கேரளா அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், கேரள அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணி ஒடிசா அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் அடித்தார்.
31 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார் சஞ்சு சாம்சன். 4 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார். மற்ற வீரர்கள் இந்த அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடாத நிலையில், சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டத்தால் கேரளா 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஒடிசா அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆகி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடிய ஆட்டம் அவருக்கு என சமூக ஊடகங்களை இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி பாராட்டை குவித்து வருகிறது. இதற்கு முன்னதாக இதே தொடரில் ஒரு போட்டியில் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்து இருந்தார். அதையும் சுட்டிக் காட்டி இப்படி ஒரு அதிரடி ஆட்டக்காரருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
எனினும், சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் சஞ்சு சாம்சனை விட அதிக ரன்கள் குவித்தும், அதிக பேட்டிங் சராசரி வைத்தும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். இந்த தொடரை வைத்து சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர் பஞ்சாப் அணியின் அபிஷேக் சர்மா. அவர் 5 போட்டிகளில் 2 சதம், 2 அரைசதம் அடித்து 364 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 72 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 209 ஆகும்.