ரஜினி, கமல், விஜய் பற்றி பேசிய சஞ்சு சாம்சன்.. ஐபிஎல்-லுக்கு நடுவே திரைப்பட விழாவில் அதிரடி
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரஜினி, கமல், விஜய் என தமிழ் திரைப்பட நடிகர்கள் பற்றி பேசி இருக்கிறார். இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த "அதிரடி" திரைப்படம், வரும் 22-ம் தேதி தமிழில் அதே பெயரில் வெளியாகிறது.
இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரமும், சிஎஸ்கே வீரருமான சஞ்சு சாம்சன், "சிறு வயதிலிருந்தே ரஜினி சார், கமல் சார் மற்றும் விஜய் அண்ணா ஆகியோரின் படங்களைப் பார்த்து தான் வளர்ந்தேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். இது அங்கிருந்த தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் பேசுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு தனது பொறுப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு பெரிய மற்றும் அதிக கோப்பைகளை வென்ற அணியில் இருக்கும்போது கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிரிக்கெட்டைத் தாண்டி வெளியில் செல்லும்போது ரசிகர்கள் காட்டும் அன்பு பிரமிக்க வைப்பதாகக் கூறினார். "சேட்டா... அடுத்த மேட்ச் ஜெயிங்க, கோப்பையைத் தட்டுறோம், தூக்குறோம்" என்று ரசிகர்கள் இதயத்திலிருந்து வெளிப்படுத்தும் பாசம் நெஞ்சைத் தொடுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் தனது சென்னை பயணம் குறித்துப் பேசிய சஞ்சு, "தமிழகம் எனக்கு இரண்டாவது வீடு போன்றது. சமீபத்தில் கூட சென்னையில் உள்ள 'நாயர் மெஸ்' உணவகத்தில் சாப்பிட்டேன், அங்கு உணவு மிக அற்புதமாக இருந்தது" என்று தனது சென்னை பாசத்தை வெளிப்படுத்தினார். சினிமாவில் நடிப்பது குறித்து நகைச்சுவையாகப் பேசிய அவர், தனக்கு சினிமாவில் சிறிய கதாபாத்திரம் வந்தபோது 'பெரிய ரோல்' கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறி மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணி தற்போது 2026 ஐபிஎல் தொடரில் தனது கடைசி இரண்டு லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
