திருவனந்தபுரம்: கேரளா பிரீமியர் லீக் தொடரில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3 அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். 3வது லீக் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து 2 லீக் போட்டிகளிலும் அரைசதம் விளாசி மாஸ் காட்டி இருக்கிறார்.
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் கேரளா பிரீமியர் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் திடீரென நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்கி சொதப்பினார். இதன்பின் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 121 ரன்களை விளாசி தள்ளினார். இதனைத் தொடர்ந்து ஆடிய போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்களை விளாசிய அசத்தினார்.
இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு வந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 37 பந்துகளுக்கு 62 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக தொடர்ச்சியாக ஹாட்ரிக் அரைசதம் விளாசி சஞ்சு சாம்சன் கவனத்தை ஈர்த்துள்ளார். கேரளா பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் சஞ்சு சாம்சன் இருக்கிறார்.
இதன் மூலமாக சஞ்சு சாம்சன் முழுமையாக ஆசியக் கோப்பை தொடருக்கு தயாராகிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இணைக்கு பிரஷர் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆசியக் கோப்பை தொடரில் சுப்மன் கில் - சஞ்சு சாம்சன் இணை தொடக்கம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.
கடைசியாக இங்கிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஐபிஎல் தொடரிலும் காயம் அடைந்தார். இதனால் சஞ்சு சாம்சனின் ஃபார்ம் மீது கேள்விகள் எழுந்தன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரளா பிரீமியர் லீக் தொடரில் சஞ்சு சாம்சன் வெளுத்து கட்டி வருகிறார்.