மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடுவதற்காக சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசையை மாற்றக்கூடாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கின்றார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது சுப்மன் கில், திடீரென ஒரு ஆண்டுக்கு பிறகு டி20 அணியில் கம்பேக் கொடுத்தார். அப்போது ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் இல்லாததால் தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அஜித் அகார்கர் விளக்கம் அளித்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தது மட்டுமல்லாமல் மூன்று சதம் அடித்திருந்தார். இந்த நிலையில் இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசை குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஞ்சு சாம்சன் டாப் மூன்று வீரர் இடத்தில் களமிறங்கும் போது மிகவும் அபாயகரமாக இருப்பார்.
அந்த இடத்தில் அவர் களமிறங்கினால் மட்டுமே போட்டியை வென்று தருவார். அவருடைய இடத்தை மாற்ற வேண்டாம். சாம்சன் இடத்தில் கில் விளையாடுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. டி 20 கிரிக்கெட்டில் டாப் வரிசையில் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக பல சிறப்பான சம்பவங்களை செய்திருக்கின்றார். சாம்சன் இடத்தில் அவரை போல் விளையாடுவது கில் போன்ற வீரருக்கு கடுமையான பணியாக இருக்கும்.
இதனால் கில், வேறு ஏதேனும் வீரரின் இடத்தில் விளையாடட்டும் தயவு செய்து சஞ்சு சாம்சனை அப்படியே விட்டுவிடுங்கள். அவர் தொடக்க வீரராகவே களமிறங்கட்டும். டி20 அணியில் சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து விளையாட வேண்டும். ஏற்கனவே அவர் சதம் அடித்து பெரிய ஸ்கோரை குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கின்றார்.
துபாய் போன்ற ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தான் அணி தங்களது பிளேயிங் லெவனில் நான்கு சூழல் பந்துவீச்சாளர்களை கூட வைத்து விளையாடலாம். இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களை பயன்படுத்துவதா? இல்லை மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்தவதா என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் துபாயில் சுழற் பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
அனைத்து விதமான ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்கள் இந்திய அணியிடம் இருக்கிறார்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்தியா வரும் புதன்கிழமை யுஏஇ அணிக்கு எதிராகவும் செப்டம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும் செப்டம்பர் 19ஆம் தேதி ஓமன் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறார்கள்.