மும்பை: இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா, சக வீரரான சஞ்சு சாம்சன் தன்னிடம் தனது தாய்மொழியான பஞ்சாபியில் பேசுவதாக ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சாம்சன், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் மொழியை சரளமாக பேசுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சஞ்சு சாம்சன் பல ஆண்டுகள் வட இந்தியாவில் தான் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள சஞ்சு சாம்சனின் இந்த பன்மொழித் திறன், களத்தில் இருவருக்கும் இடையே சிறப்பான புரிதலை ஏற்படுத்துகிறது. இந்தியா டுடே நிகழ்ச்சியில் சஞ்சு சாம்சன் முன்னிலையில் பேசிய அபிஷேக் சர்மா, "எங்கள் இருவருக்கும் இடையே மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அவர் என்னிடம் பேசும்போதெல்லாம் பஞ்சாபியில் பேசவே முயற்சிப்பார். அவர் பஞ்சாபியில் மிகச் சிறப்பாகப் பேசுகிறார். நாங்கள் முதலில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவோம், பின்னர் இந்திக்கு மாறுவோம். நான் சற்று உணர்ச்சிவசப்படும்போது பஞ்சாபியில் பேசுவேன். நான் அவரிடம் 'சஞ்சு பாய், அடித்து தூக்கட்டுமா' என கேட்பேன், அதற்கு அவர் 'ஹான் ஹான் சக் தே சக் தே' என பஞ்சாபியிலேயே உற்சாகப்படுத்துவார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சஞ்சு பாய் மிகவும் அன்பான மற்றும் அக்கறையான நபர். இப்படிப்பட்ட வீரர்கள் அணியில் இருந்தால், நமக்கு பின்னால் எப்போதும் ஒரு ஆதரவு இருப்பதை உணர்வோம். களத்திலும் சரி, வெளியிலும் சரி அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா துவக்க கூட்டணி இந்திய அணிக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வெறும் 7.1 ஓவர்களில் 98 ரன்கள் குவித்து பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இவர்களின் இந்த சிறப்பான தொடக்கத்தின் மூலம் இந்திய அணி ஒரு பிரம்மாண்டமான ஸ்கோரை குவித்து, இறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

குறிப்பாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு வலது கை பேட்ஸ்மேன் இணைந்து களத்தில் அதிரடி காட்டும்போது அது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. இருவருமே பவர்பிளே ஓவர்களில் பந்துவீச்சாளர்களை நிலைபெற விடாமல் ஒரே மாதிரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இவர்களின் இந்த சுவாரஸ்யமான புரிதல் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது.
