சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் அணிமாற்றம் பற்றி பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 'டிரேட்' முறையில் கொண்டுவர மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ,மீண்டும் தகவல் வெளியானது. இந்த முறை சிஎஸ்கே அணி முக்கிய வீரர்களை கொடுத்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வுக்கு இழுக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்த யூகங்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்புக்கான கடைசி நாளான நவம்பர் 15 நெருங்கி வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேற விரும்புவதாகச் சில மாதங்களாகவே செய்திகள் கசிந்து வந்தன. அவரை தங்கள் அணியில் சேர்க்க டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகள் ஆர்வமாக இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், 'கிரிக்பஸ்' வெளியிட்ட செய்தியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. இது ஒரு மிகப் பெரிய டிரேடாக இருக்கும் என்றும், சாம்சனுக்காக சிஎஸ்கே அணியின் ஒரு "மாபெரும் வீரர்" ராஜஸ்தான் அணிக்கு அனுப்பப்படலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது. மேலும், அந்த முக்கிய வீரரிடம் ராஜஸ்தான் அணிக்குச் செல்ல சம்மதமா என்றும் சிஎஸ்கே நிர்வாகம் பேசியதாகக் கூறப்பட்டது, இது இந்த வதந்திக்கு மேலும் வலு சேர்த்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் மனோஜ் படேல் லண்டனிலிருந்து மும்பை வந்திருப்பதும், அவர் பல்வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதும் இந்த யூகங்களை உறுதி செய்வதாக அமைந்தது.
இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணம், சிஎஸ்கே அணியின் எதிர்காலத் திட்டங்கள்தான். எம்.எஸ். தோனி 2026 ஐபிஎல் வரை நிச்சயம் விளையாடுவார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2026 ஐபிஎல் தொடருக்கான திட்டமிடலில் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
தோனிக்குப் பிறகு, சிஎஸ்கே அணிக்கு ஒரு நிரந்தர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை என்பதால், சஞ்சு சாம்சன் அந்த இடத்திற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த பரபரப்பான யூகங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாம்சன் டிரேட் குறித்து பேசிய அவர், "இல்லை, அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு," என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒரே வரியில் அவர் அளித்த இந்த பதில், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவார் என்ற அனைத்து யூகங்களையும் தற்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஒருவேளை இந்த டிரேட் நடந்திருந்தால், ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியதற்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் இது ஒரு மிகப் பெரிய டிரேடாக இருந்திருக்கும். தற்போதைக்கு சிஎஸ்கே நிர்வாகத்தின் மறுப்பு இந்த வதந்திகளை அடக்கியிருந்தாலும், வீரர்கள் பரிமாற்றத்திற்கான கடைசி நிமிடங்களில் எதுவும் நடக்கலாம் என்பதால், நவம்பர் 15 வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.