ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு விலக முடிவு செய்து விட்டதாகவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்குத் தேவை இருக்கும் வேறு இரண்டு பெரிய அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேப்டன் பதவி கேட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் அணியை விட்டு விலக உள்ளதாக ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதனால் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் கைவிட்டு விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெரியவில்லை.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சஞ்சு சாம்சனுக்குச் சிறப்பாக அமையவில்லை. இந்த ஆண்டு சில போட்டிகளை அவர் காயத்துடன் விளையாடினார். சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாட முடியாத நிலைக்கும் அவர் தள்ளப்பட்டார். இந்த நிலையில், அவர் 9 போட்டிகளில் விளையாடி 285 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக இருந்தது. ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைத்தான் பிடித்தது.
இந்தத் தொடரின் இடையே ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே விரிசல் விழுந்ததாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதை அந்த அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்திருந்தார். ஆனால் தற்போது, ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே கேப்டன் பதவிக்கான போட்டி நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடாத போட்டிகளிலும், அவர் இம்பாக்ட் வீரராக விளையாடிய போட்டிகளிலும் ரியான் பராக்தான் கேப்டனாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் கேப்டன் பதவிக்காக முட்டி மோதி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது மேலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சு சாம்சன் - ரியான் பராக் - ஜெய்ஸ்வால் என இது மும்முனை போட்டியாக மாறி உள்ளதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் சாலையைக் கடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது" என்று பதிவு செய்திருந்தார். மேலும், அந்தப் புகைப்படத்தில் அவர் மஞ்சள் நிறக் கோட்டைத் தாண்டுவது போல இருந்தது. இதை வைத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தாவ உள்ளதாக ஒருபக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.