மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் காட்டி வரும் அசுரத்தனமான ஃபார்ம், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு, இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. சாம்சனின் இந்த அதிரடியால் இந்திய அணியின் தேர்வுக்குழுவினருக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை ஈவு இரக்கமின்றி விளாசி வருகிறார். இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 2 பிரம்மாண்ட சதங்கள் உட்பட 293 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். இவரது சராசரி 58.60 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 178.65 ஆகவும் உள்ளது. மறுபுறம், ரிஷப் பண்ட் தனது அதிரடி ஃபார்மை மீட்க முடியாமல் திணறி வருகிறார். இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 24.50 சராசரியுடன் வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளது. அங்குள்ள வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட சிறந்த பேட்டிங் நுட்பமும், பொறுமையும் மிகவும் அவசியம். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சாம்சனின் புள்ளிவிவரங்கள் மிகச் சிறப்பாக உள்ளன. இதுவரை 16 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 56.66 சராசரியுடன் 510 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக தென்னாப்பிரிக்க மண்ணில் 2 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 120 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33.50 சராசரியுடன் 871 ரன்கள் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் 3 போட்டிகளில் ஆடி 101 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ரசிகர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ரிஷப் பண்ட் ஒரு சிறந்த மேட்ச் வின்னர் என்றாலும், அவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வைத்துவிட்டு, ஒருநாள் அணியில் சாம்சனுக்கு முறையான மற்றும் நிரந்தர வாய்ப்பளிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நெருக்கடியான கட்டங்களில் அபாரமாக விளையாடும் திறமை பண்ட்டுக்கு இருந்தாலும், சஞ்சு சாம்சனின் தற்போதைய அபார ஃபார்ம், அவரது சிறப்பான ஒருநாள் போட்டி சராசரி மற்றும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அவருக்கு உள்ள ரெக்கார்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இனி அவரை புறக்கணிப்பது தேர்வுக்குழுவிற்கு மிகக் கடினமான காரியமே. 2027 உலகக் கோப்பைக்கான பயணம் தொடங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் ஒருநாள் அணியில் மிகப்பெரிய மாற்றம் வர அதிக வாய்ப்புள்ளது.