மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலக முடிவு எடுத்துள்ள நிலையில், அவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று டெல்லி அணி நிர்வாகம் தீவிரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் அணியுடன் சில டிரேட் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிய தொகை கொடுத்தாவது வாங்க முடிவு எடுத்திருக்கிறது.
அண்மை காலமாக ராஜஸ்தான் அணியில் நிகழும் சம்பவங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிய் விலகி இருக்கும் நிலையில், அடுத்ததாக சஞ்சு சாம்சனும் விலக உள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சனை போல் இன்னும் சில வீரர்களும் அந்த அணியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான் அணியில் இருந்து விலகுவதை சஞ்சு சாம்சன் உறுதி செய்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் ராஜஸ்தான் அணியின் டிமாண்ட் மிகப்பெரிய அளவில் இருந்தது. சஞ்சு சாம்சனை கொடுத்தால் ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று கூறியது.
இதனால் டிரேட் பேச்சுவார்த்தையில் இருந்து சிஎஸ்கே பின் வாங்கியது. அதேபோல் கேகேஆர் அணியிடம் ரிங்கு சிங்கை கேட்டு டிமாண்ட் வைத்தது. இதனால் கேகேஆர் அணியும் பேச்சுவார்த்தையை கிடப்பில் போட்டது. இன்னும் ஒரு மாதத்தில் ரீடெய்ன் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை ஐபிஎல் அணி நிர்வாகம் வெளியிட வேண்டும். இதனால் சஞ்சு சாம்சன் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே டெல்லி அணி எப்படியாவது சஞ்சு சாம்சனை வாங்கிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. கடந்த சீசனிலேயே கேஎல் ராகுல் கேப்டன்சியை ஏற்க மறுத்தார். இதனால் வேறு வழியின்றி அக்சர் படேல் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதனால் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்க டெல்லி அணி ஆர்வம் காட்டி வருகிறது.
அதற்கான பதிலாக சஞ்சு சாம்சன் இருப்பார் என்றும் கருதி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. அதேபோல் கேஎல் ராகுலை கொடுக்கவும் டெல்லி அணி தயாராக இல்லை. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை வாங்க மிகப்பெரிய போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே, கேகேஆர், டெல்லி, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் சஞ்சு சாம்சனை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கேற்ப பர்ஸையும் ஒவ்வொரு அணியும் தயார் செய்து வருகிறது. சிஎஸ்கே அணி சுமார் ரூ.25 கோடி பர்ஸ் உடன் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.