மும்பை: சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்காட் அல்லது ரவீந்திர ஜடேஜாவை கொடுத்தால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாக எதிர் அணிகளில் இருந்து டிரேட் செய்து சில வீரர்களை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு முன்பாகவே தங்களது அணியை கட்டமைக்க முடிவு எடுத்திருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு தரமான ஒரு அணியை கொடுக்க தோனி ஒரு முடிவுடன் இருக்கிறார்.

அதற்காக சிஎஸ்கே அணி நேரடியாக டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதற்கேற்ப ராஜஸ்தான் அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சனும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்றால், வேறு அணியால் அவர் வாங்க வாய்ப்புள்ளது.
அதனால் டிரேட் மூலமாக சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சிஎஸ்கே நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சஞ்சு சாம்சனும் ராஜஸ்தான் அணியில் விளையாட விரும்பாததால், சஞ்சு சாம்சனுக்கு நிகரான மாற்று வீரரை வாங்கிவிட வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேச்சுவார்த்தைக்கு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜிடம் இருந்து பதில் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை கொடுக்க வேண்டுமென்றால், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று டிமாண்ட் வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி தரப்பில் எந்த வீரரையும் கொடுக்க முன் வரவில்லை.
இதுவரை சிஎஸ்கே அணி ஐபிஎல் ஏலத்தில் வாங்கிய எந்த வீரரையும் டிரேட் செய்து கைவிட்டதில்லை. ராபின் உத்தப்பாவை வாங்கிய போது கூட, ராஜஸ்தான் அணிக்கு பணம் மட்டுமே சிஎஸ்கே அணி நிர்வாகம் வழங்கியது. இதனால் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு ராஜஸ்தான் அணியை எப்படி சிஎஸ்கே அணி நிர்வாகம் சரிகட்ட போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியின் ஐகானிக் வீரர்களாக இருக்கின்றனர். சிஎஸ்கே அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வீரரை ராஜஸ்தான் அணியை கேட்பதால், இந்த டிரேட் சாத்தியமாகுமா என்ற விவாதங்களும் தொடங்கி இருக்கின்றன. இதனால் சஞ்சு சாம்சனை டிரேட் விவகாரம் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிடும் வரை நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.