மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை கேகேஆர் அணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சனை கொடுக்க முன் வந்துள்ள நிலையில், கேகேஆர் அணியின் ரிங்கு சிங்கை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அந்த அணியின் உரிமையாளர் மனோஜ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஜாஸ் பட்லரை தக்க வைக்க வேண்டும் என்பதில் சஞ்சு சாம்சன் பிடிவாதம் காட்டி இருக்கிறார். ஆனால் ஜாஸ் பட்லருக்கு பதிலாக ஹெட்மயர் மற்றும் துருவ் ஜுரெல் இருவரையும் டீடெய்ன் செய்வதில் ராஜஸ்தான் அணி நிர்வாகம் பிடிவாதம் காட்டி இருக்கிறது.

இருந்தாலும் சமாதானமான சஞ்சு சாம்சன், தனக்கு கிடைத்த அணியுடன் விளையாடி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் நிறைவு செய்தார். இந்த தோல்விக்கு சஞ்சு சாம்சனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மீண்டும் ரீடெய்ன் செய்த வீரர்களின் செயல்பாடுகள் குறித்து சஞ்சு சாம்சன் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.
இதன் காரணமாக ராஜஸ்தான் அணியில் இருந்து விலகும் முடிவை சஞ்சு சாம்சன் எடுத்துள்ளார். தன்னை டிரேட் செய்து வேறு அணிக்கோ அல்லது மினி ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று கோரி இருக்கிறார். இதனால் ஏற்றுக் கொண்ட ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டியது.
ஆனால் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜ், சிஎஸ்கே அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவரை கேட்டிருக்கிறது. அதற்கு சிஎஸ்கே அணி பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கிறோம், ஆனால் எந்த வீரரையும் கொடுக்க முடியாது என்று பதில் அளித்துள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் பேச்சுகள் முடிவுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியுடன் கேகேஆர் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. சஞ்சு சாம்சனை கொடுக்க ராஜஸ்தான் அணி கொடுக்க முன் வந்துள்ள நிலையில், கேகேஆர் அணியில் இருந்து ரிங்கு சிங்கை கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கேகேஆர் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் ஆலோசித்து வருகின்றன.
அதேபோல் கேகேஆர் அணி மட்டுமல்லாமல் டெல்லி, லக்னோ உள்ளிட்ட அணிகளும் சஞ்சு சாம்சனை டிரேட் செய்து வாங்க தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் அடுத்த சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சஞ்சு சாம்சனை போன்ற முன்னணி இந்திய பேட்ஸ்மேன் கிடைக்க மாட்டார் என்பதால், மினி ஏலத்திலும் பெரிய தொகைக்கு செல்வார் என்று பார்க்கப்படுகிறது.