சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்திருக்கும் சஞ்சு சாம்சன் தனது முன்னாள் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'பிளாக்' (Block) செய்து இருக்கிறார். இதை உறைந்து போயுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் இதன் பின்னணி குறித்து பல்வேறு கருத்துகளையும் கூறி வருகின்றனர்.
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மாறியுள்ளார். இந்த வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, சென்னை அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் சென்றனர்.

2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. சஞ்சு சாம்சன் தனது தற்போதைய சம்பளமான ₹18 கோடிக்கு சென்னை அணிக்கு மாற்றப்பட்டார். பதிலுக்கு, பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா, தனது முதல் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸுக்குத் திரும்புகிறார். 2008-ல் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றபோது ஜடேஜா அந்த அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீரர் பரிமாற்றத்திற்குப் பிறகு, சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்பான அனைத்து பதிவுகளையும், புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். மேலும், ராஜஸ்தான் அணியின் பழைய பதிவுகளில் அவர் செய்திருந்த 'லைக்குகள்' மற்றும் 'கமெண்டுகளும்' காணாமல் போயுள்ளன.
இறுதியாக, அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கத்தையே பிளாக் செய்திருப்பது ரசிகர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணி நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையே திரைக்குப் பின்னால் பெரிய பிரச்சனை நடந்திருக்கலாம் என்ற ஊகங்களைத் ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான பந்தம் மிகவும் ஆழமானது. ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் (149) விளையாடிய வீரர் மற்றும் அதிக ரன்களைக் (4,027) குவித்த வீரர் என்ற பெருமை சஞ்சு சாம்சனுக்கே உரியது. 2021-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், 2022-ல் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். 2008-க்குப் பிறகு இதுவே ராஜஸ்தான் அணியின் சிறந்த செயல்பாடு ஆகும்.
2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவே தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கினார் சஞ்சு சாம்சன் . இப்படி அணியின் முகமாக விளங்கிய ஒரு வீரர், அணியை விட்டு வெளியேறியதும் அதன் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சனின் வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாப்-ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடிய சாம்சன், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2026 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி, வெறும் ஆட்டமாக இல்லாமல், உணர்ச்சிகரமான ஒரு மாபெரும் யுத்தமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேசத் துவங்கி இருக்கின்றனர்.