மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரில் சுப்மன் கில்லை தொடக்க வீரராக களமிறக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை நம்பர் 5ல் களமிறக்கும் திட்டம் இருந்தால், அதனை இந்திய அணி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் 3 நாட்களில் தேர்வு செய்யப்பட உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இன்னும் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை. ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சிறந்த தொடக்க கூட்டணியாக உருவெடுத்திருக்கின்றனர். இதனால் இவர்களை பிரிக்க கூடாது என்ற விவாதம் நடந்து வருகிறது.

ஆனால் சூர்யகுமார் யாதவிற்கு பின் இந்திய அணியை வழிநடத்த ஒரு கேப்டனை உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதனால் ஜெய்ஸ்வாலை விடவும், சுப்மன் கில்லை இந்திய டி20 அணிக்குள் கொண்டு வர தேர்வுக் குழுவினர் தீவிரமாக இருக்கின்றனர். ஆனால் சுப்மன் கில் ஆரம்ப காலம் முதலே டாப் ஆர்டரிலேயே விளையாடி வந்திருக்கிறார்.
இதனால் சுப்மன் கில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டால், சஞ்சு சாம்சனை நம்பர் 5 இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஆகாஷ் சோப்ரா பேசுகையில், என்னை பொறுத்தவரை பெஞ்சில் ஒரு மாற்று தொடக்க வீரரை வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. இங்கிலாந்து டி20 தொடரில் 3வது தொடக்க வீரரை இந்திய அணி தேர்வு செய்யவில்லை.
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் ஃபார்மை இழப்பார்கள் என்று யாரும் சிந்தனை கூட செய்யவில்லை. ஒருவேளை 3வது தொடக்க வீரரை ஆசியக் கோப்பையிலும் சேர்க்கவில்லை என்றால், டி20 உலகக்கோப்பை வரை இதே கூட்டணி தொடர வேண்டும். என்னை பொறுத்தவரை சுப்மன் கில் 3வது தொடக்க வீரர். அவரை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்த்தால், எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார்?
ஒருவேளை சஞ்சு சாம்சனை நீக்கினால், வேறு யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள்? அது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். அதேபோல் சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்க முடியாது. ஏனென்றால் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். நம்பர் 5ல் சஞ்சு சாம்சனை களமிறக்கினால், அது நன்றாக இருக்காது.
சுப்மன் கில்லால் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆட்டத்தை விளையாட முடியுமா என்பதும் கேள்வி தான். ஜெய்ஸ்வால் ஆட்டத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவரால் எளிதாக இந்திய டி20 அணியின் டிஎன்ஏவில் இணைந்து கொள்ள முடொஇயும். அதேபோல் சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சனை நீக்கினால், கடந்த 12 போட்டிகளாக சஞ்சு சாம்சன் மீது செய்யப்பட்ட முதலீடு அத்தனையும் மோசமானதாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.