ஹாய் என்று ஆரம்பித்தேன்.. இப்போது தாலி கட்டப் போறேன்.. சந்தோஷத்தில் சஞ்சு!
டெல்லி: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தனது காதலை பகிரங்கப்படுத்தியுள்ளார். இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடியவுள்ளது.
இந்திய கிரிக்கெட் கண்ட அற்புதமான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடி பல கோடி இந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர். இப்போது அவர் திருமணக் களத்தில் குதிக்கவுள்ளார்.. இடையில் தான் நீந்தி மகிழ்ந்த காதல் களி குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி காலை 11.11 மணி. அப்போதுதான் ஹாய் என்று அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அன்று ஆரம்பித்தது.. இதோ 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் போடுவதற்கும், அவருடனான காதலை உலகுக்கு உரக்கச் சொல்லவும் இத்தனை காலம் எடுத்துக் கொண்டு விட்டது.
இருவரும் இணைந்து எத்தனையோ பொழுதுகளைக் கழித்துள்ளோம். ஆனால் இருவரும் இணைந்து பொதுவெளியில் நடமாடத்தான் முடியவில்லை.
ஆனால் இன்று முதல் இருவரும் கரம் கோர்த்து நடப்போம். எங்களது காதலை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்ட இரு வீட்டு பெற்றோருக்கும் நிறைய நன்றிகள். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம்.
சாரு உன்னைப் போன்ற ஒரு பெண்ணை கைப் பிடிக்கப் போவதற்காக நான் மிகவும் மகிழ்கிறேன், ஆசிர்வதிக்கப்பட்டனவாக உணர்கிறேன்.
அனைவரும் உங்களது இதயத்திலிருந்தும், புன்னகையுடனும் எங்களை வாழ்த்துங்கள், ஆசிர்வதியுங்கள்.. என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.
சாருவின் தந்தை பி. ரமேஷ் குமார். கேரளாவைச் சேர்ந்தவர். திருவனந்தபுரத்தில் மூத்த பத்திரிகையாளராக உள்ளார். டிசம்பர் 22ம் தேதி திருமணம் நடைபெறும் என்று ரமேஷ் குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications