மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமான சாதனையை படைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆப்க்கு செல்லாமல் சிஎஸ்கே அணி வெளியேறி இருக்கிறது. இது அந்த அணி ரசிகர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ஏற்கனவே பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அந்த அணி நிர்வாகம் எடுத்திருக்கிறது. சீசன் முடிவதற்குள்ளையே பிரவீஸ், உர்வில் பட்டேல்,ஆயுஷ் மாத்ரே போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை அணியில் எடுத்திருக்கிறது.

இந்த தருணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு அனுப்புமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கேட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தங்களிடமிருந்து இரண்டு முக்கிய வீரர்களை அனுப்பினால் சஞ்சு சாம்சனை தருகிறோம் என்று கூறிவிட்டது.
இதனை அடுத்து சஞ்சு சாம்சனை நாங்கள் ஏலத்திலே வாங்கிக் கொள்கிறோம் என்ற முடிவில் சிஎஸ்கே இருக்கிறது. இதனிடையே, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருந்தபோதுதான் திடீரென்று ரியான் பராக்கை கேப்டனாக அணி நிர்வாகம் உள்ளே அனுப்பியது.
இது சஞ்சு சாம்சனுக்கு ஏமாற்றத்தை தந்தது. இதனால் தான் கேப்டன் பதவி கொடுத்தால் மட்டுமே வருவேன் என்ற முடிவில் சஞ்சு சாம்சன் இருக்கின்றார். அந்த வகையில் சிஎஸ்கே அணி ஏற்கனவே ருதுராஜை கேப்டனாக வளர்த்து வருகிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு அந்தப் பதவி கிடைக்காது.
இந்த தருணத்தில் சஞ்சு சாம்சனை முதல் முறையாக அடையாளம் கண்டு அவரை வளர்த்ததே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான். இதனால் சஞ்சு சாம்சன் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ரஹானே தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் அந்த பொறுப்பு சாம்சனுக்கு கிடைக்கும் என்பதால் கொல்கத்தா அணி சஞ்சு சாம்சனை எப்படியாவது வாங்க முயற்சி எடுத்து வருகிறது. இதனால் சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.