கொச்சி: இந்திய கிரிக்கெட் அணியில் திறமை இருந்தும் தொடர்ந்து வாய்ப்புக்காகப் போராடும் வீரர்களில் முக்கியமானவர் சஞ்சு சாம்சன். ஒரு வழியாக டி20 அணியில் தனக்கான தொடக்க வீரர் இடத்தைப் பிடித்தார் என்று ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில், சுப்மன் கில்லின் வருகை மீண்டும் அவரது இடத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தொடர்களில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கி, மூன்று சதங்கள் அடித்து சிறப்பாகச் செயல்பட்டார். இதனால், ஆசியக் கோப்பையிலும் அவரே தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுப்மன் கில்லின் வருகை மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள துணை கேப்டன் பதவி, அவரே அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. "சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இல்லாததால்தான் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்கினார்" எனத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியிருப்பது, இந்த யூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தொடக்க வீரர் இடம் கைநழுவிப் போவதை உணர்ந்துகொண்ட சஞ்சு சாம்சன், அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள மிடில் ஆர்டரில், குறிப்பாக ஃபினிஷர் ரோலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாக, தற்போது நடைபெற்று வரும் கேரள கிரிக்கெட் லீக் (KCL) தொடரில், கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக 6-வது வீரராகக் களமிறங்கினார்.
ஆனால், இந்த முயற்சி அவருக்குப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அந்தப் போட்டியில் 22 பந்துகளைச் சந்தித்த அவர், ஒரு பவுண்டரி அல்லது ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினார். ஒருபுறம் அவரது அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்த நிலையில், சாம்சனின் இந்த மெதுவான ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்திய அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கி 180-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்று சதங்கள் அடித்த சாம்சன், தற்போது தனக்குப் பரிச்சயமில்லாத மிடில் ஆர்டரில் திணறுவது அவரது ரசிகர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சன் ஆசியக் கோப்பையில் ப்ளேயிங் லெவனில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், மிடில் ஆர்டரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில், அவரது இடம் கேள்விக்குறியாவதுடன், ப்ளேயிங் லெவனில் இருந்து ஓரங்கட்டப்படவும் வாய்ப்புள்ளது.