கொச்சி: கேரள கிரிக்கெட் லீக் (KCL) தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கி, சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வுக்குழுவுக்கு அழுத்தமான செய்தியை அனுப்பியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் கேரள கிரிக்கெட் லீக் தொடரின் இரண்டாவது சீசனில், இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 21 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளுடன் மொத்தம் 285 ரன்களைக் குவித்துள்ளார். தொடரிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் இவர்தான். மேலும், 71.25 என்ற சராசரியுடனும், 182.69 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

கொல்லம் செய்லர்ஸ் அணிக்கு எதிராக 121 ரன்கள், திருச்சூர் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 89 ரன்கள், திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் 62 ரன்கள் என ஒவ்வொரு போட்டியிலும் தனது வானவேடிக்கையைத் தொடர்ந்து வருகிறார்.
சஞ்சு சாம்சனின் இந்த மிரட்டல் ஃபார்ம், 2025 ஆசியக் கோப்பைத் தொடரில் அவரது இடம் குறித்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது. ஆசியக் கோப்பை அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளதால், சாம்சனின் தொடக்க வீரர் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்க வீரராகக் களமிறங்கி, ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்திருந்தார்.
ஆனால், சுப்மன் கில் அணிக்குத் திரும்பியுள்ளதால், சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிடலாம். மிடில் ஆர்டரில் அவரது ரெக்கார்டுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானே கூறுகையில், "சுப்மன் கில் அணிக்குத் திரும்பியிருப்பதால், அவர்தான் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனாலும், சஞ்சு சாம்சன் அணியில் இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன்" என்றார்.
அதேசமயம், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "சுப்மன் கில் வந்தபிறகு, சாம்சன் ஆடும் லெவனில் இடம்பெறமாட்டார்" என்று கருத்து தெரிவித்துள்ளார். கேரள லீக்கில் சஞ்சு சாம்சன் ரன் மழை பொழிந்தாலும், ஆசியக் கோப்பையில் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனாலும், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுத்து, தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளார் சஞ்சு சாம்சன்.