ஒரே நாளில் அண்ணன்,தம்பி இருவேறு இடத்தில் சதம்..கான் பிரதர்ஸ்க்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் பல சகோதரர்கள் ஒரே போட்டியில் விளையாடி அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையை வென்று தந்தார்கள்.
இதேபோன்று ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா சகோதரர்களும் இந்திய அணிக்கு குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் சர்பிராஸ்கான் மற்றும் அவருடைய சகோதரர் முசீர்கான் ஆகியோர் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே சர்பிராஸ் கான் தன்னுடைய திறமையை கடந்த நான்கு ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டும் சர்பிராஸ்கான், டான் பிராட் மேனனுக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் அதிக ரன் சராசரி வைத்திருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ்கான் 161 ரன்கள் குவித்து இருக்கிறார்.
160 பந்துகளை எதிர் கொண்ட அவர் 18 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என பட்டையை கிளப்பி இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி இடத்தில் சர்பிராஸ்கானுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர் முசீர் கான் தற்போது அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் ஒன்றில் பங்கேற்ற சகோதரர் முசிர் க்கான் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இன்றைய ஆட்டத்தில் அவர் 106 பந்துகளை எதிர் கொண்டு 118 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்துள்ளது. ஒரே நாளில் அண்ணன் தம்பி இருவருமே அதிரடியாக விளையாடி இந்திய அணிக்காக வெவ்வேறு இடங்களில் ரன் சேர்த்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications