மும்பை: இந்திய ஏ அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்படாதது கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சர்பிராஸ் கான் முஸ்லிம் என்பதால் தான் அவர் இந்திய ஏ அணியில் கூட சேர்க்கப்படவில்லை என்றும், இதற்கு பின்னணியில் இருக்கும் கம்பீரின் நிலை என்ன என்று அனைவருக்குமே தெரியும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சமா முஹம்மது தெரிவித்துள்ளார்.
28 வயதான சர்பிராஸ் கான், இந்திய அணியில் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடந்த ஆண்டு விளையாடினார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் கடந்த காலங்களில் சர்பிராஸ் கான் அணியில் இருந்த போது அணியில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு கசிய விடுவதாக அவர் மீது குற்றம் சாட்டி கம்பீர் அணியை விட்டு நீக்கினார். இதுவரை அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஏ அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதில் கூட சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தேர்வு குழுவினரும் அணி நிர்வாகமும் எப்போதுமே ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள். ஆனால் சில சமயம் ரசிகர்களின் கண்களுக்கு அது தவறாக தெரியலாம். தயவு செய்து ஒரு விஷயத்தை வேறு மாதிரியாக திரிக்காதீர்கள்.
உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசாதீர்கள் என்று அவர் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பேசிய பிஜேபி தலைவர் ஷேஷாத், இந்தியாவை மதம் சாதி இனம் பெயரால் பிரிக்காதீர்கள். உங்களுடைய மத அரசியலை கிரிக்கெட்டுக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். சர்பிராஸ் கான் விவகாரம் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பலரும் இந்திய அணியில் ரஜத் பட்டிதார், ருதுராஜ், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக உள்ள நிலையில் சர்பராஸ்கான் சேர்க்கப்படவில்லை என்று கூறியிருந்தனர். மற்றொரு தரப்பினர் இந்திய அணியில் கூட சர்பராஸ் கானுக்கு இடம் கேட்கவில்லை. ஆனால் இந்திய ஏ அணியில் விளையாட கூட அவருக்கு தகுதி இல்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.