டெல்லி: தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான முதல் தரப் போட்டிகளுக்கான இந்தியா 'ஏ' அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், உள்நாட்டுப் போட்டிகளில் ரன் குவித்து வரும் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷப் பண்ட்டின் வருகையே சர்ஃபராஸ் கானின் புறக்கணிப்புக்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாயன்று, பிசிசிஐ தேர்வுக் குழு, தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டு முதல் தரப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்தியா 'ஏ' அணியை அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் ரன்களைக் குவித்து வரும் சர்ஃபராஸ் கானுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
சமீபத்தில் தனது உடற்தகுதியிலும் தீவிர கவனம் செலுத்தி, சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்து கட்டுமஸ்தாக மாறியிருந்தார். இருந்தபோதிலும், அவரது பெயர் அணியில் இடம்பெறவில்லை. அதே சமயம், காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவல்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட், காயம் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்த நிலையில், இந்தத் தொடரின் மூலம் மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். அவருக்கு கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக 5-ஆம் வரிசையில் பேட்டிங் செய்யும் ரிஷப் பண்ட், இந்த இந்தியா 'ஏ' போட்டிகளிலும் அதே இடத்தில் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ஃபராஸ் கானும் வழக்கமாக மிடில் ஆர்டரில், குறிப்பாக 5 அல்லது 6-ஆம் வரிசையிலேயே பேட்டிங் செய்து வருகிறார். ரிஷப் பண்ட் 5-ஆம் வரிசையில் ஆடும்போது, சர்ஃபராஸ் கான் அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம். அவரை வெளியில் அமர வைப்பதற்குப் பதிலாக, அணியிலேயே எடுக்க வேண்டாம் என தேர்வுக்குழுவினர் முடிவெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி என்றால் இனி சர்ஃபராஸ் கானின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விக்குறியா? என்று கேட்டால் முழுமையாக இல்லை என்றே பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது. தேர்வுக்குழுவினர் மத்தியில் ஒரு மாற்று யோசனை இருப்பதாகத் தெரிகிறது. அதன்படி, சர்ஃபராஸ் கான் தனது வழக்கமான மிடில்-ஆர்டர் பேட்டிங் வரிசையை விடுத்து, டாப்-ஆர்டரில், குறிப்பாக 3-ஆம் வரிசையில் களமிறங்கி தன்னை நிரூபிக்க முயற்சித்தால், இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில், 3-ஆம் வரிசை பேட்டிங் இடம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இந்த இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு தேர்வுக்குழுவினர் தொடர்ந்து வாய்ப்பளிக்கத் தயாராக உள்ளனர். அவரும் இந்தியா 'ஏ' அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிடிஐயிடம் பேசிய முன்னாள் தேசிய தேர்வாளர் ஒருவர், "சர்ஃபராஸ் கான், மும்பை அணி நிர்வாகத்திடமும், மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானேவிடமும் ஆலோசித்து, 3-ஆம் வரிசையில் பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும். அங்கு அவர் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர் தொடர்ந்து 5 அல்லது 6-ஆம் வரிசையில் ஆடினால், அது இந்திய அணிக்கு உதவாது. ஏனெனில், அந்த இடங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எனப் பன்முகத் திறமை கொண்ட வீரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அந்த இடங்களை நிரப்புவார்கள்" என்று கூறியுள்ளார்.
இந்த புறக்கணிப்பு, ரஜத் படிதார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு மத்தியில் சர்ஃபராஸ் கான் பின்தங்கியிருப்பதைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தனது கடைசி சில முதல் தரப் போட்டிகளில் இரட்டைச் சதம் உட்பட மூன்று சதங்களை விளாசியுள்ளார். படிதாரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான போட்டி கடுமையாகியுள்ளது.
உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, தனது பேட்டிங் வரிசையை மாற்றியமைத்து, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலமே சர்ஃபராஸ் கான் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்பதே தற்போதைய நிதர்சனமாக உள்ளது.